நெல்லை, மே 19- குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாறைகளுக்குள் சிக்கிய மேலும் ஒருவரை மீட்கும் பணி 5-வது நாளாக நடைபெற்றது. இந்நிலையில், மீட்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், குவாரியில் சிக்கியுள்ள ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அவர்கள் சொல்வதன் அடிப்படையில் பார்க்கும்போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார். இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.