states

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி வழக்கு: கோஸ்டல் எனர்ஜி நிறுவன இயக்குநருக்கு ஜாமீன் தடை

சென்னை,ஆக.18- ரூ.564 கோடி நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கில் கோஸ்டல் எனர்ஜி நிறுவன இயக்குநருக்கு வழங்கிய ஜாமீ னுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்தோனேசியாவில் இருந்து கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தரம் குறைந்த  நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என இறக்குமதி செய்து அரசை ஏமாற்றியதாக  கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, தேசிய அனல்மின் கழகம், உலோகங்கள் மற்றும் தாதுக்கள் விற்பனை நிறுவனம், ஆரவளி தனியார் மின்நிறுவனம் ஆகியவற்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதில், தரமற்ற நிலக்கரியை விற்பனை செய்ததில் 564 கோடி ரூபாய் அகமது புகாரியின் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.  மேலும் அகமது புகாரியின் கோஸ்டல் எனர்ஜன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான 557 கோடி ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியது.  இதையடுத்து ஜாமீன் கோரி  அகமது புகாரி  தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 16 அன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி அமலாக்கத்துறை சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளியன்று நடை பெற்றது. அப்போது, ஜாமீன் அளித்ததற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அகமது ஏ.ஆர். புகாரிக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அமலாக்கத்துறை மனுவுக்கு ஆகஸ்ட் 23 ஆம்  தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று  அகமது புகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.