states

img

கல்விக் கடன் பெற்றவர்கள் குற்றவாளிகளா? - பெ.சண்முகம்

“கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”  - என்பது ஒளவையாரின் அமுதமொழி! கல்வியின் அவசி யத்தை வலியுறுத்தும் பல்வேறு பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. ஒரு ஜனம் தான் படிக்க வேண்டும்; வெகுஜனம் படிக்கக் கூடாது என்ற காலம் மலையேறிவிட்டது. இருப்பினும், கல்வித் துறையில் தனியார் புகுந்து அது ஒரு லாபம் ஈட்டும் தொழிலாக மாறிவிட்டது. இதனால், ஏழை மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடி சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு தேவை யான பொருளாதார வசதிஇன்றி தவித்து வருகின்ற னர். இந்த நிலையில் தான், இத்தகைய மாணவர்க ளுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கல்விக்கென கடன் வழங்க வழி செய்தது. பல லட்சக்கணக்கான மாண வர்கள் கடன் பெற்று உயர்கல்வி கற்று வரு கின்றனர்.  ஏற்கனவே, கடன் பெற்று படித்து முடித்த மாண வர்கள், படிப்புக்கேற்ற வேலை, கௌரவமான ஊதியம் என்பது இல்லாமல் மீண்டும் தவித்து வரு கின்றனர். வாங்கிய கடனை கட்டாயம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்பது தான் சராசரி மனி தனின் மனநிலை. அதனால் தான் “கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”  என்று கம்பர் பாடினார். ஆனால் மக்களின் சூழ்நிலை மற்றும் தவிர்க்க முடியாத இதர செலவு கள் காரணமாக உரிய காலத்தில் கடனை திரும்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடனை வசூலிக்க தனியார் ஏஜெண்டுகளை (குண்டர்களை) நியமித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.  இந்தக் குண்டர்கள் சாம, பேத, தான, தண்டம் என எல்லா விதங்களிலும் முயற்சிக்கின்றனர். எப்படியாவது கடனை வசூலிப்பது என்ற முடிவில் கடன் பெற்றவர்களை, அச்சுறுத்துவது, அடிப்பது, அவமரியாதையாக பேசுவது என நடந்து கொள்கின்றனர். இதற்குப் பயந்து தற்கொலை செய்து கொள்வது என்ற துயரமான முடிவுக்கு பலரும்ஆளானதை அறிவோம். 

வங்கி நிர்வாகங்கள், பட்டப்படிப்புக்காக கடன் வாங்கினால் படிப்பு முடித்து ஓராண்டு முடிந்த பிறகு கடன் தவணையை கட்ட வேண்டும் என்று கூறுகின்றன. பட்ட மேற்படிப்புக்கு கடன் வாங்கினா லும் இதே நிலை தான். அதற்குப் பிறகு முனைவர் பட்டம் உள்ளிட்ட படிப்பை மேற்கொண்டிருந்தா லும், கடனை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றனர். படித்துக் கொண்டி ருப்பவரால் எப்படி கடனை கட்ட முடியும் என்று கேட்டால், உங்கள் விருப்பத்துக்கு நீங்கள் மேலும் மேலும் படித்துக் கொண்டிருந்தால் அதை ஏற்க முடியாது என்றும், வட்டி, அபராத வட்டி என்று போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றனர்.  கடன் வாங்கி லாபம் ஈட்டும் தொழிலில் முதலீடு செய்திருந்தால் வட்டி, அபராத வட்டி போடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. கல்வி கடனுக்கு அப ராத வட்டி விதிப்பதை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. கடன் பெற்று ஐந்து அல்லது ஆறு வருடங்களில் அசலை விட வட்டி அதிகமாகி விடுகிறது. மீளமுடியாத கடன் சுமையில் மாணவ ரும், அவனுடைய குடும்பமும் சிக்கிவிடுகிறது. படித்து முடித்து வேலைக்கு சென்ற பிறகு கடனை செலுத்தவில்லை என்றால் கட்டாயப்படுத்துவதில் ஒரு நியாயமிருக்கிறது. 

வேலை என்பது ஒன்றிய - மாநில அரசுகளின் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒன்று. பசியைப் போக்க, ஏதோ கிடைத்த வேலைக்கு, குறைந்த கூலிக்கு செல்லும் நிலையில் எப்படி கடன் தவணையை கட்ட முடியும்? பெருமுதலாளிகள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் துவங்குகி றார்கள். லாபம் சம்பாதிக்கிறார்கள். ஒரே நபர் பல வங்கிகளில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுகிறார். அத்தகைய கடன்களை வராக் கடன், வஜா கடன் என்று தள்ளுபடி செய்கிறது ஒன்றிய அரசு. ஆனால் மாணவர்கள் கல்வி கற்ப தற்காக பெற்ற கடனை தள்ளுபடி செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இரங்கவில்லை.  உதாரணத்திற்கு தஞ்சை மாவட்டம், திரு மண்டங்குடி சர்க்கரை ஆலை முதலாளி தேசிய மயமாக்கப்பட்ட 5 வங்கிகளில் கடன் பெற்றுள் ளார். செய்தி இதுவல்ல, மாறாக கரும்பு விவசாயி களுக்கு தெரியாமலேயே விவசாயிகளின் பெயரில் 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். தற்போது ஆலையையும், வேறு ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, விவ சாயிகள் தான் கடன் வாங்காமலேயே கடனா ளிக்கப்பட்டுள்ளனர். கடனிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று கடந்த நவம்பர் 30ந் தேதி முதல் இரவு, பகலாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு பெரிய மோசடி வங்கி அதிகாரிகளின் துணையில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற பெரும் தொகையை குறித்து கவலைப்படாத வங்கிகள் தான் ஏழைகளிடம் கருணையின்றி நடந்து கொள்கின்றன.

ஒரு வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வங்கி கள், சிறிய கடன் பெற்றவர்கள் பின்னால் செல்வ தற்குப் பதிலாக பெரிய அளவில் கடன் பெற்றவர்களி டமிருந்து வசூலிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அவர்களும் இதை ஒரு உத்தரவாகவோ, தீர்ப்பாகவோ தெரிவிக்க வில்லை. தீர்ப்பையே மதிக்காத நாட்டில் கருத்தையா கணக்கிலெடுத்துக் கொள்ளப் போகிறார்கள்?  சமரச தீர்வு மையத்தின் மூலம் கடன் பிரச்சனை யை முடிவுக்கு கொண்டு வரலாம் என்றாலும் கட்ட வேண்டிய தொகையில் எவ்வளவு குறை வாக கட்டுகிறீர்களோ, பிறகு வாழ்நாளில் எப்போ துமே வங்கியில் கடன் பெற முடியாது என்று பய முறுத்துகிறார்கள். ஆனால், இந்த விதிகளெல் லாம் முதலாளிகளுக்கு இல்லை. வங்கிகளில் அவர்கள் கடன் மேல் கடன் வாங்கி புதிய புதிய தொழில்கள், வியாபாரம் செய்யலாம், ஆட்சி யாளர்களின் செல்வாக்கில் தள்ளுபடி செய்யப் பட்டு விடும். மீண்டும் அதே வங்கியில் கடன் பெற லாம். இது யாருக்கான அரசு. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு மகாராஜா போல் வாழ்வதும், உண்மையிலேயே கடனை செலுத்த எந்த வசதி வாய்ப்பும் இல்லாத ஏழைகளிடத்தில் கெடுபிடி செய்வதும் என்னவகையான அணுகுமுறை? எனவே, கல்விக் கடன் சம்பந்தப்பட்ட பிரச்ச னையில், வங்கி விதிகளில் பொருத்தமான மாற்றங்களை செய்வது அவசியம். 

1.    சம்பந்தப்பட்ட மாணவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவரை கடனை செலுத்த வற்புறுத்தக்கூடாது. 
2.    கல்விக் கடனுக்கு வட்டி, அபராத வட்டி விதிப்பது கூடாது.
3.    மாணவர்களிடம் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகத்தோடு நேரடி தொடர்பில்லாத குண்டர்களை ஏவிவிடக் கூடாது
4.    குறைந்தபட்சம் ஏழைகள் மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மாணவர்கள் பெற்றகல்வி கடன்களையாவது ஒன்றிய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். 
5.    வேலையில் சேர்ந்து ஆறுமாத காலத்திலிருந்து கடன் தவணையை செலுத்தும் வகையில் விதிகள் உருவாக்கப்பட வேண்டும்.