states

மேலும் 7லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை

சென்னை, நவ.9- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும்  கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து மனு நிராகரிக்கப்பட்ட 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் தங்களுக்கும் ரூ.1000 பணம்  வழங்க வேண்டும் என்று கேட்டு மேல்முறையீடு செய்திருந்த னர். இதில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதில் 7 லட்சம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகுதி படைத்த பெண்களுக்கு வருகிற 10-ந் தேதி ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் நவ.10 அன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் விழா நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. சென்னையில் கலைவாணர் அரங்கில்  நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் 2-ம் கட்ட விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி வருவதையொட்டி 10 ஆம் தேதி அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் தகுதியான பயனாளிகள் செல்போனுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து வியாழனன்று (நவ.9) சோதனை அடிப்படையில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள  பெண்களுக்கு   ரூ.1000 அனுப்பும்  பணி தொடங்கியது. இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம்  மகளிர்கள் கலைஞர் உரிமைத் திட்டத்தின் மூலம் பயன் அடைகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.   சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது மேலும் கூறியதாவது:- மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாதவர்கள் மறுபடி யும் விண்ணப்பிப்பதில் மீண்டும் அவர்கள் மனு பரிசீலிக்கப்பட்டது. அதில் புதிதாக 7 லட்சம் மகளிர்  அந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வழங்க உள்ளார். இப்போது இந்த திட்டத்தில் மொத்த பயனாளிகள் 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் மகளிர் பயன்பெற உள்ளனர். மாதம் 1000 ரூபாய் வீதம் வருடத்திற்கு  12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.