states

“தீக்கதிர் ஒரு செய்திப் பத்திரிகை மட்டுமல்ல நடவடிக்கை எடுக்க வைக்கும் தூண்டுகோல்!”

திருநெல்வேலி, செப்.22- தீக்கதிர் ஒரு செய்திப்பத்திரிகையாக மட்டுமல்லாமல் நடவடிக்கை எடுக்க வைக்கும் தூண்டுகோலாகவும் உள்ளது என கே.பாலகிருஷ்ணன் கூறினார். தீக்கதிர் நெல்லைப்பதிப்பு அலுவலகத்தை திறந்துவைத்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மேலும் பேசியதாவது:  தீக்கதிர் தனது ஐந்தாவது பதிப்பை நெல்லையில் தொடங்கியிருக்கிறது. பணபலம் மிக்க அரசியல் கட்சிகள்கூட நாளிதழை நடத்த முடியாமல் கைவிடும் நிலையை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தீக்கதிர் நெருக்கடிகளை சந்தி்த்துதான் முன்னேறி வருகிறது. மிகப்பெரிய அச்சு ஊடகங்கள்கூட தொடர்ந்து நடத்த முடியுமா என்று சிந்திக்கும் காலம் இது. பக்கங்களை குறைப்பதும், விலையை அதிகரிப்பதும் நடக்கிறது. ஆனால், கடுமையான காகித, அச்சு மை விலையேற்றம் போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டு லாபநட்ட கணக்கு பார்க்காமல் தீக்கதிர் வெளியிடப்படுகிறது. ஒரு நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடும்போது அந்த நிறுவனம் தரும் விளம்பரத்தை பிரசுரிக்க முடியாது என்பதில் தீக்கதிர் உறுதியாக உள்ளது என்பதை ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது பார்த்தோம். நடுநிலை என்றால் ஒடுக்கப் பட்டோரையும் ஒடுக்குபவரையும் சமமாக பார்ப்பதாகும். அப்படி ஒரு நிலைபாடு தீக்கதிருக்கு இல்லை. ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் மக்களின் குரலாகவே தீக்கதிர் இருக்கும். இந்த கொள்கையுடன்தான் கடந்த 60 ஆண்டுகளாக தீக்கதிர் பயணித்து வருகிறது என்பது பெருமைக்குரியது.

கலைஞர் முதல்வராக இருந்தபோதும் இல்லாதபோதும் காலையில் எழுந்த உடன் படிக்கும் முதல் பத்திரிகை முரசொலி என்றால் இரண்டாவது பத்திரிகை தீக்கதிராகத்தான் இருக்கும். அடுத்த அரை மணி நேரத்தில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதே என்று விசாரிப்பார். அவர் கேட்டபிறகு தீக்கதிரை அதிகாரிகள் தேடிப் படிக்கும் நிலை இருந்தது. இப்படி தீக்கதிர் ஒரு செய்திப்பத்திரிகையாக மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களுக்கு நடவடிக்கைக்கான தூண்டுதலையும் அளிக்கும் பத்திரிகை. தீக்கதிரின் 60 ஆவது ஆண்டு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி கொடுத்திருந்தார். இப்போது நெல்லைப் பதிப்புக்கும் வாழ்த்து செய்தி அனுப்பியதுடன் அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீக்கதிர் நல்லதை வரவேற்பதாகவும், சுட்டிக்காட்ட வேண்டியதை தைரியமாக சுட்டிக்காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். சுட்டிக்காட்டுவது தவறை திருத்திக் கொள்வதற்காகத்தான். பாஜக அரசு விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க தீர்மானித்தது. அது இந்த நாடு மதச்சார்பற்றதல்ல என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை மட்டும் பாதுகாக்கிற மதச்சார்புள்ள நாடாக இந்தியாவை அறிவிப்பதன் வெளிப்பாடுதான் இது என்றார்.    திமுக நெல்லை மாவட்டச் செயலாளர் டி.பி.எம் மைதீன்கான் பேசும்போது, தீக்கதிரை கலைஞர் போற்றியதுபோல் அவரது பேரன் உதயநிதியும் போற்றுகிறார். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில், முரசொலி, தீக்கதிர், விடுதலை ஆகிய நாளிதழ்களை படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக தன்னுடன் வந்த இளைஞர் அணி தலைவர் மீரான் தெரிவித்ததாக கூறினார்.