சென்னை,ஜூன் 23- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள் ளது. சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்ட மைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன. அதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரண மாக போக்குவரத்து நெரிசல் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளில் நீடித்து வரு கிறது. சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு பேருந்து கள், தனியார் ஆம்னி பேருந்துகள், கார், கனரக வாகனங்கள் என லட்சக் கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக் குள் வந்து செல்கின்றன. காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அதேபோல் மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்கு வரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வாகன போக்கு வரத்தை எளிதாக்கும் வகையில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட் டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெறவிருக்கிறது. இதில் 6 வழித்தடங்கள் அமையவுள்ளன. பெருங்களத்தூர் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கச்சாவடி தாண்டி இந்த பாலம் முடிவடையும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கவுள்ளது. இந்த மேம்பாலப் பணி முடிவடை யும் போது தாம்பரம்-செங்கல்பட்டு இரு வழித்தடத்திலும் குறைந்த நேரத்தில் விரைவாக வாகனங்களில் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும். மேம்பாலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைய இருக்கிறது. வாகனங்கள் சுமார் 100 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் செங்கல்பட்டு - திண்டி வனம், ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறவுள்ளது. 67.1 கி.மீ நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை தற்போது 4 வழிச் சாலையாக உள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் (அணுகு) சாலைகளுடன் 8 வழிச் சாலையை மேம்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலை கணக்கிட்டு இந்த சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருக் கிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி கூறியதாவது:- ஜிஎஸ்டி சாலையில் 94 கிலோ மீட்டர் தாம்பரம்- திண்டிவனம் பாதைக்கான விரிவாக்க திட்ட அறிக்கை நிறைவடைந்துள்ளது. இதில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கிலோமீட்டர் தூரத் துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்த வழித்தடத்தில் கட்டுமானப் பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும்.
தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும் போது லட்சக் கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 விழுக்காடு வாகனங்கள் உயர்த்தப் பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறும். இதனால் வாகன நெரிசல், விபத்துகள் குறையும். ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. புதிய பாலத்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் திண்டிவனம் வரை யிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையின் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டிருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போதுள்ள சுரங்கப்பாதைக்கு மேலே உயர்த் தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதேபோல் சென்னை- பெங்க ளூரு நெடுஞ்சாலையில் மதுர வாயல்- திருபெரும்புதூர் வரை 23.2 கி.மீட்டர், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கி.மீட்டர், திருச்சி- தஞ்சா வூர் நெடுஞ்சாலையில் திருச்சி- துவாக்குடி 14 கி.மீட்டருக்கு உயர்த்தப்பட்ட மேம்பாலம் அமைக்க வும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் முன்மொழிந்துள்ளது.