states

img

மக்கள் விஞ்ஞானி மேக்நாத் சாகா!

1905 வங்கப் பிரிவினை காலில் செருப்புகூட அணியாத 12 வயது ஏழைச் சிறுவன் சுதந்திர தாகம் மேலெழ மாணவர்களுடன் சேர்ந்து உரத்த குரல் எழுப்பினான், “திரும்பிப்போ! திரும்பிப்போ! வங்காள கவர்னரே திரும்பிப் போ!” கடும் கோபம் கொண்ட பள்ளி நிர்வாகம் கவர்னருக்கு தன் விசுவாசத்தைக் காட்ட ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியது. அந்தச் சிறுவர்களில் ஒருவர் மேக்நாத் சாகா. பிற்காலத்தில் நவீன வானியற்பியலின் தந்தையாக உருவெடுத்தார். மேக்நாத் வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், சாகா சமன்பாட்டையும் கண்டுபிடித்தார். இந்த பேரண்டம் பெருவெடிப்பு ஒன்றினால் உருவான ரகசியத்தை அறிய இவரது கோட்பாடே இன்று வழிசெய்துள்ளது.  தன் கண்டுபிடிப்புகளுக்காக மேக்நாத், நான்கு முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் காலனி ஆதிக்க எதிர்ப்பாளரான அவருக்கு பரிசு வழங்கப்படவில்லை. ‘சாகா அணுக்கரு  ஆய்வு நிறுவனம்’ உட்பட பல அறிவியல் ஆய்வு நிறுவனங்களை உருவாக்கினார். ‘சயின்ஸ் அண்டு கல்ச்சர்’ என்ற பத்திரிக்கை யை நடத்தி அறிவியலைப் பரப்பினார்.

விஞ்ஞானி பி.சி.ராய், சத்யேந்திரநாத் போஸ், விடுதலைப் போராட்ட தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு என பலரும் அவரது அறிவுக் கூர்மையை உணர்ந்து அவரிடம் நட்பு பாராட்டினர். அவர் இந்திய மக்களை பீடித்திருக்கும் படிப்பறிவின்மை, ஏழ்மை, நோய்நொடிகள் ஆகியவற்றைப் போக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொல்கத்தாவில் சுயேச்சை வேட்பாளராக வென்றார். நாடாளுமன்றத்தில் அரசாங்கம் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்டார். மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கப் போராடினார். அணு ஆராய்ச்சி யில் அரசாங்கம் ஒளிவுமறைவு இல்லாமல் மக்களுக்கு உண்மைகளை சொல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அறிவிய லை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்றார். அறிவியல், தொழில் துறை அனைத்திலும் பிற வல்லரசு நாடுகளின் அடிமையாக இல்லாமல் இந்தியா சுதந்திரமாக விளங்க வேண்டும் என்றார். அணு ஆராய்ச்சி மட்டும் அல்லாமல் வளிமண்டல ஆராய்ச்சி, வரலாறு, தொல்லியல், பொருளாதாரம், மனித உரிமை, அரசியல் என பல துறைகளில் மேக்நாத் சாகா செயல்பட்டார். ஒரு விஞ்ஞானியாக மட்டுமல்லாமல் மக்கள் நாயகனாகவும் விளங்கிய மேக்நாத் சாகா 1956-இல் காலமானார்.