விருதுநகர் மாவட்டம் சூறைக்குண்டு அருகே அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு வெளியே மக்களுக்கு தெரியும் வண்ணம் ‘‘பாரத மாதா’’ சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவ அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், பாஜகவினர் அனுமதி பெறாத நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சிலையை மீட்டுள்ளனர். இந்நிலையில், சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செவ்வாயன்று நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தனியார் இடமாகவோ, பட்டா இடமாகவோ இருந்தாலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எந்த ஒரு சிலையையும் நிறுவ அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என சுற்றறிக்கை உள்ளது’’ எனக் கூறினார். இதையடுத்து சிலையை நிறுவ உரிய அனுமதி பெறப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப் பினார். இதனை தொடர்ந்து வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.