states

img

கேரள பல்கலை. பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு.... கேரள அரசு விசாரணைக் குழு அமைப்பு....

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக படிப்புக்கு புதிதாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த படிப்பிற்கான பாடப் புத்தகத்தில் காந்தியடிகள், நேருவுடன் ஆர்எஸ்எஸ் தலைவர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்யாயா ஆகியோரது வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்களும் சேர்க்கப்பட்டிருப்பதால் கேரள கல்வித்துறையில் சர்ச்சை எழுந்துள்ளது. 

பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சேர்த்தது தொடர்பாக விளக்கம் அளிக்க துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரனுக்கு கேரள உயர்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கேரள கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்த்ததுசரிதான் என்று கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தர் கோபிநாத் ரவீந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

விசாரணைக் குழு
இதுகுறித்து விசாரிக்க இருவர் குழுவை அமைத்து இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இந்த குழுவின் அறிக்கையின் படி, துணை வேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ‘‘சுதந்திரப் போராட்டத்தின் போது, புறமுதுகு காட்டியவர்களையோ, புறமுதுகுகாட்டும் கொள்கைகளையோ மகத்துவம்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை’’ என்றும் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.

;