கண்ணூர், அக்.21-
மக்களவைத் தேர்தலில் யாரை தோற்கடிப்பது என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான யோசனை இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற சக்திகளின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நாம் முன்னேற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தலச்சேரியில் சி.எச்.கணாரன் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் மேலும் கூறுகையில், இந்த முக்கியமான தேர்தலை மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்க வேண்டும். ஒரே இலக்குடன் முன்னேற காங்கிரஸ் தயாராக வேண்டும். கேரளாவில் சிபிஎம் உட்பட பல மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் எதிரிகள் இருக்கலாம். இருப்பினும், இந்திய அரசமைப்பு மற்றும் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பே முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். ஏற்கனவே, ஒற்றுமையாக இருந்து வாஜ்பாய் அமைச்சரவையை வீழ்த்திய அனுபவம் உண்டு. நாடு ஒளிமயமான எதிர்காலத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது மீண்டும் இருளுக்கு செல்ல வேண்டுமா என்பது தான் நம்முன் உள்ள கேள்வி.
நாட்டின் செல்வத்தை கொள்ளையடிப்பதற்காக நரேந்திர மோடி வெறுப்புக்கும் பாகுபாடுகளுக்கும் துணை நிற்கிறார். உ.பி.,யில் மோடி கொடியசைத்து துவக்கி வைத்த புதிய ரயிலுக்கு நமோ பாரத் என பெயரிடப்பட்டுள்ளது. நான்தான் இந்தியா என்று மோடி கூறுகிறார். அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி, தான்தான் இந்தியா என்று கூறினார். இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.
மணிப்பூரில் கலவரம் நடந்து 100 நாட்கள் ஆன பிறகும் அமைதி காத்த மோடி, இஸ்ரேலுக்காக சில மணி நேரங்களிலேயே பதில் கொடுத்தார். அதில் இந்தியாவின் இதுவரையான நிலைப்பாடு முறியடிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி உள்ளிட்ட பலரும் பாலஸ்தீனியர்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் இஸ்லாமோஃபோபியா (இஸ்லாமிய வெறுப்பு) மோடியை இயக்குகிறது என்றும் யெச்சூரி கூறினார்.