திருவனந்தபுரம், டிச. 6 - கார்பன் உமிழ்வை நிறுத்தும் வகையில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்படுத்தி வரும் மீனங்காடி திட்டம் உலகளவில் புகழ்பெறு கிறது. வாகனங்கள் மற்றும் இதர வழிகள் மூலம் கார்பன் உமிழ்வைத் தடுக்க மாநில அரசுகள் முக்கியப்பங்கு வகிக்கமுடியும் என்பதற்கு இத்திட்டம் நாட்டிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஒன்றிய அரசின் பஞ்சாயத்து அமைச்சரகம் இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆலோசித்துவருகிறது.
கிளாஸ்கோ மாநாட்டிற்கு முன்பே மீனங்காடி
காலநிலை மாற்றம் குறித்து விவாதிக்க கிளாஸ்கோ நகரில் ஐநாவின் உச்சிமாநாடு சமீபத்தில் நடந்தது. இதில் இந்தியாவின் நிலைபாடு உலகளவில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட்டது. இதன் பின் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்தில் செயல்பட்டுவரும் திட்டத்தின் முன் மாதிரியில் கார்பன் உமிழ்வு குறைப்பு திட்டத்தை நாடு முழுவதும் பின்பற்ற ஒன்றிய அரசு கொள்கை யளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. கிளாஸ்கோ மாநாட்டிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மீனங்காடியில் கார்பன் உமிழ்வைக் குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வெற்றியடைந்துவருகிறது.
‘கார்பன் நியூட்ரல்’ திட்டம்
வயநாடு மாவட்டம் காலநிலை மாற்றத்தி னால் ஏற்படும் கெடுதிகளை அதிகம் அனு பவிக்கும் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தில் 2016ல் மீனங்காடி பஞ்சாயத்தில் கார்பன் எனும் கரியமில வாயுக் கழிவுகளைக் குறைப்பது என்பதை இலட்சியமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. பெருமளவில் மரங்கள் நடுவது (tree banking) என்பதே முதன்மையான நோக்கமாக இருந்தது. மீனங்காடி பஞ்சாயத்தே கார்பன் நடுநிலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் பஞ்சாயத்து. கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இதற்குப் பிறகே ‘கார்பன் நியூட்ரல் நகரம்’ அதாவது கார்பன் உமிழ்வு இல்லாத நகரம் என்ற கருத்து உருவானது.
‘கார்பன் நியூட்ரல்’ என்றால் என்ன?
வாயு மண்டலத்தில் உமிழப்படும் கார்பனின் அளவும், உறிஞ்சப்படும் அளவும் சமநிலை யில் இருப்பதே கார்பன் நடுநிலை/நியூட்ரல் எனப்படுகிறது. கார்பன் நியூட்ரல் நிலை என்பது வனம், உயிர்ப் பன்மயத்தன்மை பாது காப்பு, உணவு மற்றும் ஆற்றல் தன்னிறைவு, மாசுக்கட்டுப்பாடு, தூய மண், நீர், காற்று ஆகிய வற்றில் தன்னிறைவு பெறுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.
பெட்ரோல், கரி ஆகிய புதைபடிவ எரி பொருட்களின் பயன்பாடு மூலமே காற்று மண்ட லத்தில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமைக்குடில் வாயுக் களின் அளவு இயல்பான நிலையை விட அதிகரி க்கிறது. பூமி சூடாவதற்கு இது காரணமாகிறது.
மீனங்காடியில் நடப்பது என்ன?
கேரள அரசின் பைலட் திட்டமாக இத்திட்டம் மீனங்காடி பஞ்சாயத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக 10 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. கேரள அரசு கார்பன் உமிழ்வைக் குறைக்க உத வும் திட்டங்களை அங்கு செயல்படுத்திவருகிறது. இதில் உலகின் கவனத்தைக் கவர்ந்தது மர வங்கி (tree banking) திட்டமே. ஒவ்வொரு மரத்தின் மீதும் கிராமப்புற பஞ்சாயத்திற்கு பங்காளித்துவ அங்கீகாரம் (partnership right) உண்டு. மலைவேம்பு, வெள்ளைப் பைன், பலா, மா, ஈட்டி போன்ற மரங்கள் நடப்படுகின்றன. மரம் வளர்க்கும் விவ சாயிக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் மரம் ஒன்றிற்கு ரூ. 50 வீதம் கடன் கொடுக்கப்படுகிறது. மரம் வளர்ந்து அதை வெட்டும்போது இத்தொகை யைத் திருப்பிக் கொடுத்தால் போதும்.
இதன் மூலம் தனி மனிதர்களுக்கு சொந்த மான நிலத்தில் வனம் வளர்த்தல், எல்.இ.ஜி. (LEG Liqufied Energy Gas) மயானம், பசுமை வேளாண்மைக்கு ஊக்கமளித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க விழிப்புணர்வு, அறிவியல்ரீதியிலான கழிவு மேலாண்மை, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் உற்பத்தி, நீர் ஆதாரங்கள், நீர்நிலைகளின் பாது காப்பு, உயிர்ப்பன்மயத்தன்மை பதிவேட்டைப் (Biodiversity Register) புதுப்பித்தல், தடுப்பு அணை (றயவநசளாநன) திட்ட மாதிரிகளை உருவாக்குதல் போன்றவை நடைபெறுகின்றன.
உதவிக்கரம் நீட்டும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள்
எல் இ ஜி என்பது ஆற்றல் உற்பத்திக்காக இயற்கை அல்லது பெட்ரோலிய வாயுவைப் பயன்படுத்துதல். திருவனந்தபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தணல் சூழல் இயக்கம், எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்ட ளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வெற்றி கார்பன் நியூட்ரல் என்ற பெய ரில் பிரதேசத்தில் விளையும் பொருட் களின் விற்பனையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இதன் ஒரு பகுதியாக மலபார் காபி என்ற பெயரில் வயநாட்டில் விளையும் காபியின் தரம் உயர்த்தப்பட்டது. நிகழும் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவு களை குறைக்க உலகம் முழுவதும் ஆட்சி யாளர்கள் உருப்படியாக எதுவும் செய்யாமல் வாய்ப்பந்தல் போட்டுக்கொண்டிருக்கும்போது சூழலைப் பாதுகாக்க மக்கள் மீது அக்கறை யுடன் செயல்படும் கேரள இடதுசாரி அரசின் இந்த கார்பன் நியூட்ரல் மீனங்காடி மாதிரித் திட்டம் உலகிற்கே ஒரு மகத்தான எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்