கேரளாவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாட்டைச் சேர்ந்த 5 பேர் ஒரு காரில் நெடும்பசேரியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது பயல்குளங்கரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுதீஷ் லால், ஷைஜூ, அபிராக் மற்றும் 12 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இதில் பலத்த காயமடைந்த ஒருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.