states

img

இளைஞரை மீட்ட ராணுவத்தினருக்கு பினராய் விஜயன் நன்றி

மலப்புழாவில், சேரட் மலையில் சிக்கியிருந்த இளைஞர் மீட்ட ராணுவ வீரர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அருகே உள்ள சேரட் மலைப் பகுதிக்கு திங்கள்கிழமை பாபு என்கிற இளைஞர் உள்ளிட்டு மூன்று பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது பாபு கால் தவறி செங்குத்தான மலை இடுக்கில் விழுந்துள்ளார்.
உடனிருந்த இளைஞர்கள் பாபுவை மீட்க முயற்சி மேற்கொண்ட நிலையில், பாபுவின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், மீட்க முடியவில்லை.

உடனடியாக மலையைவிட்டு இறங்கிய இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினரால் இளைஞரை மீட்க முடியவில்லை. இதனால் இளைஞருக்கு அருகே வனவிலங்குகள் செல்லாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 
 

இந்நிலையில் பாலக்காடு மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க்கிழமை இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்றது.

இளைஞர் சிக்கியுள்ள பகுதிக்கு அருகே ஹெலிகாப்டரை செலுத்த முடியாததால், நீண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. 
இதையடுத்து, இளைஞரை மீட்பதற்காக வெலிங்டனிலிருந்து புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் ராணுவத்தினர் மலைப் பகுதிக்கு சென்றடைந்தனர். பெங்களூருவிலிருந்து கிளம்பிய 22 பேர் கொண்ட பாராசூட் குழுவினரும் சென்று 3 நாட்களாக உணவு குடிநீர் இல்லாமல் தவித்த இளைஞர் பாபுவை மீட்டனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில்,

மலம்புழாவில் சேரட் மலையில் சிக்கியிருந்த இளைஞன் மீட்கப்பட்டதால் கவலைகள் ஓய்ந்துள்ளன. அவரது உடல்நிலையை மீட்டெடுக்க தேவையான சிகிச்சை மற்றும் பராமரிப்பு இப்போது வழங்கப்படும். மீட்புப் பணியை முன்னெடுத்த ராணுவ வீரர்களுக்கும், உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி என அதில் தெரிவித்துள்ளார்.