திருவனந்தபுரம், மார்ச் 2- கேரள அரசு நிறுவனமான சப்ளைகோ-வில் மானியம் அல்லாத பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது மாநில அரசின் சந்தை தலையீட்டின் ஒரு பகுதியாகும். இந்த திருத்தப்பட்ட விலை வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் அமலுக்கு வந்தது.
2016 இல் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) ஆட்சிக்கு வந்த பிறகு, மானியப் பொருட்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம், 13 மானியப் பொருட்களின் விலை, பொதுச் சந்தை விலையில் 35 சதவிகிதமாகத் திருத்தப்பட்டது. பொதுச் சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘சபரி கே அரிசி’ சப்ளைகோ மூலம் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும். அரிசிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகபட்சமாக 10 கிலோ அரிசி வழங்கப்படும். மூன்று நாட்களில் விலை முடிவு செய்யப்படும்.
தற்போதைய ஒதுக்கீட்டில் கூடுதலாக நீல அட்டைதாரர்களுக்கு 4 கிலோ அரிசியும், வெள்ளை அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசியும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும். மாநிலத்திற்கான கூடுதல் ஒதுக்கீட்டை (டைட்ஓவர்) அதிகரிக்காமல், சப்ளைகோ போன்ற அரசு நிறுவனங்கள் திறந்த சந்தை விற்பனை திட்டத்தில் இருந்து விலக்கப்படுகிறது. இதன் மூலம் விலை உயர்வை உருவாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு மத்தியில் மாநிலத்தின் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.