states

img

மது விலக்கு நீக்கம், ஹிஜாப்க்கு தடை லட்சத்தீவில் வலுத்து வரும் போராட்டம்

கொச்சி, ஆக.13-   மதுவிலக்கை நீக்கி, பள்ளிகளில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்த ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு, லட்சத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இணைய வசதி பரவலாக இல்லாத ஒரு தீவில், 30 நாட்களுக்குள் ஆன்லைனிலேயே கலால் திருத்த மசோதா மீதான கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு முற்றிலும் நியாயமற்றது என்று தீவுவாசிகள் கூறுகின்றனர். ஒரு சில தீவுகள் ஆன்லைன் புகார் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அரசின் இரண்டு முடிவுகளையும் தீவில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.முஹம்மது பைசல் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சத்தீவு கமிட்டி செயலாளர் எம்.கே.லுக்மான் கூறுகையில், லட்சத்தீவில் மதுபானம் புழங்க அனுமதிக்கப்படாது; இதற்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சீருடை மாற்றம் அமல்படுத்தப்பட்டாலும், பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவார்கள். அனுமதிக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.