states

img

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டம்  

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி.நாகேஷ், மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் கருத்து கேட்கப்படும். அதன் பிறகு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.    

அதே சமயம் நடப்பு கல்வி ஆண்டில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை. வரும் கல்வி ஆண்டு 2022-2023 முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.    

முன்னதாக குஜராத் மாநில அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கட்டாய ஆங்கில பாடமும், 6 ஆம் வகுப்பு முதல் பகவத் கீதை பாடமும் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஜித்து வகானி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்க கூடாது என்று கூறி ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.   இந்நிலையில், பகவத் கீதை, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்றவற்றைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது எப்படி  சாத்தியமாகும்?  என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.