states

img

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து : இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யும் அம்மாநில அரசின் முடிவை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 30 ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. மேலும், இந்த 4 சதவிகித இட ஒதுக்கீடு, லிங்காயத், ஒக்கிலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் பாஜக அரசு ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 
இந்த நிலையில் கர்நாடக பாஜக அரசின் இந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அதுவரை கர்நாடக அரசு அறிவித்த இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.