முருக மடத்தின் மடாதிபதி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மடத்தால் பத்திரிகையாளர் சாய்நாத் தனக்கு வழங்கப்பட்ட பசவஸ்ரீ விருதை திருப்பி வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகள் மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சித்ரதுர்கா காவல் துறைக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் சித்ர துர்கா முருக மடத்தால் மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு பசவஸ்ரீ வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதில் 5 லட்சம் மதிப்புடையது ரொக்கம், சான்றிதழ், மற்றும் விருதுப்பலகை அகியவை அடங்கும்
இந்நிலையில் முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் மூத்த பத்திரிகையாளரும், ரூரல் இந்தியா மக்கள் காப்பகத்தின் நிறுவனர் எடிட்டர் சாய்நாத் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
சித்ரதுர்கா ஸ்ரீ முருக மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சாரணன் குறித்து ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகளால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் இப்போது போக்சோ மற்றும் பிற சட்டங்காளின் கீழ் குழந்தைகளை, குறிப்பாக உயர்நிலைப் பள்ளிப் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். .
குழந்தைகளுக்கு எதிரான எந்த வகையான குற்றங்களையும் கண்டிக்க வார்த்தைகள் இல்லை. 2017-ம் ஆண்டு எனக்கு பசவஸ்ரீ விருதையும், அதில் வந்த ரூ.5 லட்சத்தையும் மடம் கொடுத்தது. இந்நிலையில், அந்த பரிசுத் தொகையை காசோலை மூலம் திருப்பித் தருகிறேன்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும், நீதிக்கான காரணத்திற்காகவும், பசவஸ்ரீ விருதைத் திருப்பித் தருகிறேன். இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட மோசமான சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ள மைசூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் “ஓடாநாடி” மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது பாராட்டுக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.
சமூக தீமைகளுக்கு எதிரான அவர்களின் பல தசாப்த கால போராட்டம், அவர்களின் விடாமுயற்சியால் விசாரணையை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.