states

img

கர்நாடகாவில் பாஜக சிதறுகிறது எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்திற்கு 6 எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு

கர்நாடகாவில் கடந்த மே 10 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவை தென்னிந்தியாவில் இருந்து துரத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா முதல்வராக வும், டி.கே. சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் தேர்தல் முடிந்து 7 மாத காலம் ஆன பின்பும் பாஜக சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்தது.  இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகாவின் புதிய பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட விஜயேந்திரா (முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் வாரிசு) தலைமையில் சனியன்று மாலை பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்மநாபநகர் பாஜக எம்எல்ஏ ஆர்.அசோக் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆர்.அசோக் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவைச் சேர்ந்த மிக முக்கிய தலைவர்களான விஜயபுரா எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால், கோகாக் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோலி, அரபாவி எம்எல்ஏ பாலச்சந்திர ஜார்கிஹோலி, மங்களூரு தெற்கு எம்எல்ஏ வேதவியாஸ் காமத், யஷ்வந்த்பூர் எம்எல்ஏ  எஸ்டி சோமசேகர், எல்லப்பூர் எம்எல்ஏ சிவராம் ஹெப்பர் ஆகிய 6 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.  ஆர்.அசோக் எதிர்க்கட்சி தலைவர் என்ற பேச்சு அடிபட்டதும், கூட்டம் தொடங்கும் முன்பே வெளியேறினர். இந்த  விவகாரத்தால் கர்நாடாக பாஜகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதிருப்தி 6 எம்எல்ஏ-க்களில் சிலர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவராம் ஹெப்பர் காங்கிரஸில் இணைகிறார்

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், எல்லப்பூர் தொகுதியின் எம்எல்ஏ-வுமான சிவராம் ஹெப்பர் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலுக்கு ஆதாரமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை ஹெப்பர் சமீபத்தில் சந்தித்து மணிக்கணக்கில் ஆலோசனை நடத்தியுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. சிவராம் ஹெப்பர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.