உத்தரகண்ட்டில் கடந்த 10 நாட்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆம் தேதி தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிக்கொண்டனர். கடந்த 10 நாட்களாக மீட்புப்படையினர் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, தொழிலாளர்களை மீட்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கப்பாதையின் இடையில் பாறை இருந்ததால் மீட்புப் பணி தடைப்பட்டது. இதற்கிடையில் சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான 6 அங்குல அகலமுடைய பைப் போடப்பட்டுள்ளது. மேலும், வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் பேசும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தங்கள் நிலைமை மோசமாக உள்ளதாக விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் தங்களது வேதனையைத் தெரிவித்துள்ளனர்.