states

img

ஹல்த்வானி குடியிருப்பு அகற்றம்: நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

ஹல்த்வானி குடியிருப்பு அகற்றம் தொடர்பான உத்தரகண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தலைமை டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டார். 

உத்தரகண்ட் மாநிலம், ஹல்த்வானியில் 29 ஏக்கர் ரயில்வே நிலத்தில் 4000-க்கும் மேற்பட்ட வீடுகளில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில், மருத்துவமனைகள், 4 அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 4 கோயில்கள் மற்றும் 2 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளும் இருக்கின்றன. 

ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற உத்தரவிடக்கோரியும் உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு அம்மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கை விசாரித்த உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், ஜனவரி 9-ஆம் தேதிக்குள் அப்பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றவும், மறுத்தால் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தின் உதவியுடன் அவர்களை வெளியேற்றுமாறு டிசம்பர் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் எஸ்ஏ நசீர், பிரசன்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், உத்தரகண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து தலைமை டி.ஒய்.சந்திரசூட் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக ரயில்வே துறையும், உத்தரகண்ட் அரசும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.