states

img

உ.பி.யில் போலி தடுப்பூசி – 5 பேர் கைது  

வாரணாசியில் ரூ.4 கோடி மதிப்பிலான போலி தடுப்பூசி கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேரை போலீசார் கைது செய்தனர்.    

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் கொரோனா நோய்க்கான போலி தடுப்பூசி மற்றும் பரிசோதனை கருவிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இந்த தகவலின்படி புதன்கிழமை அன்று வாரணாசி லங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரோகித் நகரில் உள்ள ஒரு வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அங்கு போலி தடுப்பூசிகள் மற்றும் கொரோனா பரிசோதனை கருவிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

அதைத் தொடர்ந்து நடத்திய சோதனையில் அங்கு ரூ.4 கோடி மதிப்பிலான போலி கோவிஷீல்டு, ஜைகோவ்-டி தடுப்பூசிகளும், போலி கொரோனா பரிசோதனை கருவிகளும், குப்பிகளும் இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீஸ் தனிப்படையினர் கைப்பற்றினர்.  

இதுதொடர்பாக ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா, ஷம்ஷேர் மற்றும் அருணேஷ் ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.  

முதற்கட்ட விசாரணையில் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, ஷம்ஷேர், அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 4 பேரும் போலி தடுப்பூசிகளையும் பரிசோதனை கருவிகளையும் தயாரித்து லக்ஷ்யா ஜாவாவுக்கு வினியோகம் செய்து வந்ததும், அவர் பிற மாநிலங்களுக்கு தனது கும்பல் மூலம் அவற்றை வினியோகித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.