கேரளத்தில் மீண்டும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமையும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், 'விஷன் 2031: வளர்ச்சி மற்றும் ஜனநாயகம்' என்ற சர்வதேச கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசினார். இந்த கருத்தரங்கில் வரும் பேசியதாவது:
"கேரளத்தில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி அமையும். ஏழைகளுக்கான தேசம், வளர்ச்சியில் தீர்க்கமான குரலைக் கொண்டு மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கிய ஒரே மாநிலம் மார்க்சிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்கும் கேரளம். பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் நாட்டுக்கே தலைமையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையை வேறு எந்த மாநிலத்தையும்விட கேரளம் திறம்பட நிறைவேற்றி வருகிறது.
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஆதரிப்பதில் காங்கிரஸ் கைவிட்ட பொறுப்பை முதல்வர் பினராயி விஜயன் ஏற்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த கேரள முதல்வர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"விஷன் 2031 சர்வதேச மாநாட்டின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய ஈர்க்கக்கூடிய வார்த்தைகள் சமகால சூழ்நிலையுடன் நன்றாக ஒத்துப்போகின்றன.
மக்களிடம் அதிகாரம் இருக்கும்போது மட்டுமே ஜனநாயகம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். வளர்ச்சியின் இதயத்துடிப்பாக நமது உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்துவோம்." இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
