‘நீதித்துறை தன்னையே தோற்கடித்துக் கொண்டது’ தலைமை நீதிபதிக்கு ம.பி., பெண் நீதிபதி கடிதம்
போபால் மூத்த நீதிபதி செய்த பாலியல் துன்புறுத்தல் குறித்து கேள்வி எழுப்பிய மத்தியப் பிரதேச பெண் நீதிபதி திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த நீதிபதி ஒருவர், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைக் கண்டித்து, அதிதி குமார் சர்மா என்ற பெண் சிவில் நீதிபதி பல சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டார். கடந்த 2023 ‘பணி செய்யும் திறனில் திருப்தியில்லை’ என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் அதிதி குமார் சர்மா உள்ளிட்ட ஆறு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. பின்னர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நான்கு பெண் நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தியபோதும், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோரை பணியில் அமர்த்தாமல் நிராகரித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 2025 பிப்ரவரி மாதம் அதிதி குமார் சர்மாவின் பணிநீக்கம் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது எனக் கண்டித்தும் அவரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் ஷாடோல் மாவட்ட சிவில் நீதிபதியாக இருந்த அதிதி குமார் சர்மா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதுகுறித்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சம்மனுக்குப் பதில் பதவி உயர்வு அந்தக் கடிதத்தில், ‘அளவுகடந்த அதிகாரம் கொண்ட மூத்த நீதிபதிக்கு எதிராக நான் பேசியதால், பல ஆண்டுகளாக தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன். நீதி கிடைக்காவிட்டாலும், என் தரப்பு வாதத்தையாவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் சட்டப்பூர்வமான அனைத்து வழிகளையும் பின்பற்றினேன். ஆனால் எனது துன்பத்திற்குக் காரணமானவர் விசாரிக்கப்படாமல், அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு சம்மன் அனுப்புவதற்குப் பதிலாக கவுரவ பதவி வழங்கப்பட்டது. எனவே, நான் இந்த நீதித்துறையில் தோற்கவில்லை,அமைப்புதான் என்னைத் தோற்கடித்துவிட்டது. நான் பழிவாங்கத் துடிக்கவில்லை, நீதிக்காகவே பேசினேன். எந்தவொரு பணி நியமனமோ, இழப்பீடோ, மன்னிப்போ ஆற்ற முடியாத காயங்களுடன் இங்கிருந்து செல்கிறேன். நீதிபதியாக அல்லாமல் பாதிக்கப்பட்ட ஒருவராக பணியில் இருந்து விலகுகிறேன். நீதித்துறை என்னைத் தோற்கடித்துவிட்டது என்பதை விட, அது தன்னையே தோற்கடித்துக்கொண்டது என்ற கசப்பான உண்மையுடன் மட்டுமே செல்கிறேன்’ என்று வேதனையுடன் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.