மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா கட்சிகளுடன் இணைந்து களமிறங்குவோம்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசனை நடத்துவோம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் விவாதிக்கவில்லை. ஆனால் விரைவில் ஆலோசனை நடத்துவோம். அதே போன்று சிவசேனா (உத்தவ்) மற்றும் இடதுசாரி உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வோம். உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளி யாவதற்கு முன்பு எம்விஏ கூட்டணியில் இறுதி முடிவு எடுக்கப்படும். ஏனென்றால் நாங்கள் (எம்விஏ கூட்டணி) மகாராஷ்டிராவில் ஒன்றாக இணைந்து போராட விரும்புகிறோம்” என அவர் கூறினார். மராத்தியை ஒழிக்க சதி மேலும், “இந்தி மொழி விருப்பத் தேர்வாகவே இருக்க வேண்டும். இந்தியை தேர்ந்தெடுக்க விரும்புவோர் அதைத் தேர்வு செய்யலாம். 50-60% மக்கள் இந்தி பேசுகிறார்கள் என்பதால், அந்த மொழி அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட முடியாது. இது தவறானது. மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை மூன்றாவது மொழியாக மாற்ற மாநில அரசு உத்தரவு வெளியிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தியது. மராத்தி மொழி மற்றும் கலாச்சாரத்தை அழிக்கவே மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு முயற்சி நடக்கிறது. இது பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் சதி ஆகும்” என அவர் கூறினார்.
பாஜக, கோடி மீடியா ஊடகங்களுக்கு பதிலடி
ஜூன் 10 ,1999ஆம் ஆண்டு சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். ஆனால் பாஜகவின் சதியால் 2023ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார், அஜித் பவார் என இரண்டு பிரிவாக உடைந்தது. சரத் பவார் அணி எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியிலும், அஜித் பவார் அணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் உள்ளது. இந்நிலையில், 2025, மே மாதம் முதல் பாஜக ஆதரவு “கோடி மீடியா” ஊடகங்கள்,”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 26ஆவது ஆண்டு விழாவின் போது சரத் பவார், அஜித் பவார் அணிகள் ஒன்றாக இணைந்து பாஜக கூட்டணியில் இணையும்” என தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன. அதற்கு பல காரணங்களை வெளியிட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தின. ஆனால் தற்போது பாஜகவின் சதி மற்றும் “கோடி மீடியா” ஊடகங்களின் உள்ளடி வேலைகளுக்கு சரத் பவார், “மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து களமிறங்குவோம்” என்ற செய்தியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.