ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் மேற்குவங்க அரசுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்பு
புதுதில்லி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அஇவிதொச மத்திய செயற்குழு வரவேற்கிறது. இதுதொடர்பாக அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயராகவன், பொதுச் செயலாளர் பி. வெங்கட் விடுத்துள்ள அறிக்கையில்: ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆகஸ்ட் 1, 2025 முதல் மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக வேலை திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல் படுத்தப்படாமல் நீண்ட இடைவெளி இருந்தது, இதனால் இந்தத் திட்டத்தின் கீழ் வேலை தேடும் மேற்கு வங்காளத்தின் கிராமப்புற ஏழைகளுக்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.
3 ஆண்டுகளாக நிறுத்தம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, மேற்கு வங்கத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது நிறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தவறல்ல, ஆனால் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுக்கும் இடையிலான மோதல் ஊழல் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது திட்டத்தை செயல் படுத்தவோ அனுமதிக்காமல் ஒரு முட்டுக் கட்டையை உருவாக்கியது. அதன் விளை வாக, கிராமப்புற ஏழைகள் மிகவும் பாதிக்கப் பட்டனர். வேலைவாய்ப்பு மற்றும் நிலுவையில் உள்ள ஊதியங்களை மூன்று ஆண்டுகளாக அவர்கள் இழந்துள்ளனர்.
குளிர்பதனக் கிடங்கில் வைப்பதை கற்பனை செய்ய முடியாது
தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சைதாலி சட்டர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. “இந்தச் சட்டத்தின் திட்டம் என்றென்றும் குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்படும் சூழ்நிலையை கற்பனை செய்யவில்லை. ஊதியம் வழங்குவதில் உள்ள முறைகேடு களை விசாரிக்க ஒன்றிய அரசிடம் போதுமான வழிகள் உள்ளன. இருப்பினும், கடந்த கால நடவடிக்கைகளுக்கும் எதிர்காலத்தில் செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு செயல்பாட்டை உருவாக்கலாம். இந்த நீதிமன்றத்தின் கருத்துப்படி, இது பொது நலனுக்காக இருக்கும், மேலும் சட்டம் இயற்றப்பட்டதன் நலனுக்கும் உதவும்.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
நேர்மையான தலையீடு தேவை
முறைகேடுகள் எதுவாக இருந்தாலும், திட்டத்தைத் தொடர்வதன் முக்கியத்து வத்தையும், ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் உணர்வைப் பேணுவதன் முக்கியத்துவத்தை யும் இது மீண்டும் வலியுறுத்துவதால், கொல்கத்தா உயர் நீதிமன்ற பெஞ்சின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சட்டத்தை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்யும் பொறுப்பையும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்தின் மீது தீர்ப்பு வலியுறுத்தி யுள்ளது. இந்த நேரத்தில், மேற்கு வங்காளத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்தின் நேர்மை யான தலையீடு உண்மையில் தேவை. இதனால் கிராமப்புற ஏழைகளின் நம்பிக்கையை மீட்டெ டுக்கும் மற்றும் கிராமப்புற வங்காளத்தில் சரிந்து வரும் வேலைவாய்ப்பு விகிதத்தை மேம்படுத்தும்.
உடனே செயல்படுத்துக!
இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்து வதற்கு அரசாங்கம் உடனடியாகத் தயாராக வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலுவை யில் இருந்த ஊதியங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு மேற்கு வங்க விவசாயத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டங் களுக்கு கிடைத்த வெற்றியாகும். இது ஏப்ரல் 20 அன்று மேற்கு வங்கம் முழு வதும் விவசாய தொழிலாளர்களை திரட்டி பிரிகேடியர் மைதானத்தில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் லட்சோப லட்சம் பேர் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் ஒற்றுமையின் விளைவாகும். அமைதியாக இருக்க மறுத்த வங்காள கிராமப்புறத் தொழி லாளர்களுக்கு செவ்வணக்கம்! உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நீடூழி வாழ்க! இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறி யுள்ளனர்.