வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைமையிலான இடதுமுன்னணி தவிர வேறு எந்த அரசியல் கட்சியாலும் மக்கள் கூட்டத்தால் நிரப்ப முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. வங்கத்தில் மார்க்சிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட - பகத்சிங்கின் வாரிசுகளாய், சே குவேராவின் வாரிசுகளாய் தங்களை வரித்துக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களால் நிரம்பியது பிரிகேட் பரேடு மைதானம். ஜனவரி 7 ஞாயிறன்று, மேற்குவங்க திரிணாமுல் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் ஒன்றிய பாஜக அரசின் மதவெறி - கார்ப்பரேட் கள்ளக்கூட்டணியின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேற்குவங்க மாநிலக்குழு நடத்திய மிகப்பிரம்மாண்டமான பேரணியின் சங்கமம் இது. கடந்த 50 நாட்களாக வங்கம் முழுவதும் நடைபெற்று வந்த வாலிபர் சங்கத்தின் எழுச்சிமிகு பிரச்சார பயணங்களின் முத்தாய்ப்பாக நடைபெற்ற இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீம், வாலிபர் சங்க அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் எம்.பி., மாநில செயலாளர் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.