states

டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்த கர்நாடகா உயர்நீதிமன்றம்

பெங்களூரு, ஜூன் 30- டுவிட்டர் பதிவுகளையும், கணக்குகளை நீக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த டுவிட்டர் நிறுவனத்திற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. உலகின் முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் சமூக வலைத்தள அமைப்பை விட ஒரு செய்தி அறிவிப்பு அமைப்பாக உள்ளது. அதாவது ஒரு நாட்டின் முக்கிய தகவல் அறிவிப்புகள், முக்கிய அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், ஐநா சபையின் அறிவிப்பு மற்றும் உத்தரவுகள் என அனைத்தும் டுவிட்டர் வழியாக பதிவிடுவதால் சமூக வலைத்தளங்களில் டுவிட்டருக்கு மக்களிடையே தனி கிராக்கி உள்ளது.  இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு பல்வேறு காரண அறிக்கைகள் மூலம் பல டுவிட்டர் பதிவுகளையும், கணக்குகளையும் நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த டுவிட்டர் நிறுவனம், ஒன்றிய அரசிற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இதுதொடர்பான விசாரணை ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், வெள்ளியன்று இரண்டு நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்திய அரசு வகுக்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்” எனக் கூறி டுவிட்டரின் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு தொடர்ந்ததற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் அபராதமும்,அபராதத் தொகையை 45 நாட்களுக்கு செலுத்தவும் வேண்டும் எனவும், தவறினால் நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வீதம் அபராத தொகையில் கூடும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.