states

img

விவசாயிகளை ஏமாற்றிய மோடி அரசு

கொப்பரைத் தேங்காய்க்கு ஆதார விலை எங்கே?

புதுதில்லி, ஜன.5 - ஒன்றிய அரசு கொப்பரைத் தேங்காய்க்கு நிர்ணயித்துள்ள ஆதார விலை தமிழக தென்னை விவசாயிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டு சீசனுக்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-ஆம் ஆண்டு அரைக்கும் கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.11,160 ஆகவும், பந்து கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.12,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொப்பரைக்கு ரூ.300, பந்து கொப்பரைக்கு ரூ.250 மட்டுமே அதிகரித்துள்ளது.  கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. பந்து கொப்பரை தேங்காய் கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சிறு கொள்முதல் விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்கிறார் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன்.

அவர் கூறியதாவது:- கொப்பரை கொள்முதலால் விவசாயிகளுக்கு நேரிடையாக எந்தப் பயனும் இல்லை. வியாபாரிகள் தான் பயனடைகிறார்கள்.  விலை உயர்வால் தென்னை விவசாயிகளுக்கு சிறு நிவாரணம் இதன்மூலம் கிடைக்கும். மில்லிங் கொப்பரை கிலோ ரூ.140, பந்து கொப்பரை  கிலோ ரூ.160 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  அதே நேரத்தில் மோடி அரசு எண்ணெய் இறக்குமதியில் தாராளம் காட்டுகிறது. இதற்கு வரி விலக்கும் அளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் தரமற்ற, மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை இறக்குமதி செய்கின்றன. யார் வேண்டுமானாலும் எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்ற நிலையில் தேங்காய் எண்ணெய், கடுகு மற்றும் கடலை எண்ணெய்யின் விற்பனை கடும் சரிவை சந்தித்து வருகிறது. சாதாரண மக்கள் கால் லிட்டர், அரை லிட்டர் எண்ணெய் வாங்கும்போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் ஒரு லிட்டருக்கு அதிகமாக எண்ணெய் வாங்கும்போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதில்லை. உடுமலைப்பேட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான தென்னைகள் கருகிப்போயின. இதை தென்னை வாரியம் கண்டுகொள்ளவில்லை. அது செயல்படுவதே இல்லை. ஆனால், இந்த வாரியத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த ஒதுக்கீடு நிதி வேண்டியவர்களுக்கு மட்டுமே “ஒதுக்கீடு” செய்துகொள்ளப்படுகிறது. 

தென்னை சார் தொழில் நிறுவனமான காயர் போர்டு உள்ளிட்ட பல அமைப்புகள் உள்ளன. காயர் போர்டுக்கு கொடுக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய் மானியம் மொத்தமாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களுக்கு சென்று சேர்கிறது. ஆனால், தென்னை சார் தொழில் செய்கிற விவசாயிகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. தென்னை வளர்ச்சி வாரியம், காயர் போர்டு இரண்டும் அரசியல் ஆதாயத்திற்காக செயல்படும் அமைப்புகளாக உள்ளன. இவ்வளவு குறைகள் உள்ள நிலையில், சில ரூபாய்களை உயர்த்திவிட்டு ஏதோ பெரும் சாதனையை ஒன்றிய அரசு செய்ததாக பிரச்சாரம் செய்கிறது. கொள்முதல் விலையை உயர்த்திவிட்டதாகக் கூறுவதில் உண்மையில்லை என்பதே உண்மை என்றார்.  தென்னை விவசாயி பி.கந்தசாமி கூறியதாவது: இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் 10 சதவீத கொப்பரையை மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இது போதுமானதல்ல. ஏனெனில் விவசாயிகள் எஞ்சிய கொப்பரைத் தேங்காயை வெளிச்சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.80- க்குத்தான் விற்பனை செய்கிறார்கள் என்றார். மற்றொரு விவசாயியான ஆர்.ஏ.சக்திவேல் கூறுகையில், “இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு உதவாது. கொப்பரைத் தேங்காய் விலை ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.125 ஆக உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.  தமிழகத்தில் 4.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக  தேங்காய் விலை குறைந்துள்ளது. கொப்பரையை முழுமையாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்ப் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டுமென்கின்றனர் விவசாயிகள். 2023-ஆம் ஆண்டு அரசு 90 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 1.33 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரையை, ரூ.1,493 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது.