states

img

வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையில் அற்ப உயர்வு: அகில இந்திய விவசாய சங்கம் கண்டனம்

மோடி அரசாங்கம், 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண் விளைபொருள்களுக்கு மிகவும் அற்ப அளவிலேயே உயர்வினை அறிவித்திருப்பதற்கு அகில இந்திய விவசாய சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்டன முழக்கங்களை எழுப்பிட அறைகூவல் விடுத்திருக்கிறது. 

மோடி அரசாங்கம், அரிசி, சோளம், உளுத்தம்பருப்பு, கடலை முதலானவற்றிற்கு வெறும் 7 விழுக்காடும், கம்புவிற்கு வெறும் 8 விழுக்காடும் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையில் உயர்வினை அறிவித்திருக்கிறது. பெரும்பாலான பயிர்களுக்கு, இந்த உயர்வு என்பது பொருளாதாரத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பொதுப் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் உயர்வே கிடையாது.  

இப்பயிர்கள் அனைத்திற்குமான எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாலும், மற்றும் பல இடுபொருட்களின் விலைகளும் உயர்ந்திருப்பதாலும், பெருமளவில் இவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருப்பதாலும் இவற்றைப் பயிரிடுவதற்கான விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் கடுமையாக உயர்ந்திருக்கின்ற நிலையில்தான் இந்த அற்ப உயர்வும் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டியது முக்கியமாகும். சென்ற பருவத்தின்போதுகூட, செயற்கை உரங்கள் பற்றாக்குறை காரணமாக கள்ளச் சந்தையில் அதீத விலைக்கு விற்கப்பட்டன. அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் விதித்திருப்பதால் இப்போது நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது.

உணவுப் பொருள்களின் விலைகள் உலக அளவில் உயர்ந்திருக்கக்கூடிய சமயத்தில்தான் ஒன்றிய அரசாங்கம் இப்படி அற்ப உயர்வை அளித்திருக்கிறது என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், சமையல் எண்ணெய்கள் மற்றும் பருப்பு வகைகளில் பெரும்பாலானவற்றை இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கக்கூடிய நிலையில், அதற்கு அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில், அவற்றையே நம் நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகளுக்குக் கொடுக்கக்கூடிய விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதாகும். இந்திய விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய நிலையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால்தான் இப்பொருள்களை அவர்கள் அதிக அளவில் உற்பத்தி செய்வார்கள், இவற்றை இறக்குமதி செய்வது என்பதும் குறையும்.  ஆனால் இதனைச் செய்ய ஒன்றிய அரசாங்கம் முன்வராமல், இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும் ஒன்றிய அரசாங்கம் உற்பத்திச் செலவினத்தைப்போல் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்திருப்பதாகத் தவறானத் தகவலையும் அறிவித்திருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்ததுபோல் செய்ய அது மறுக்கிறது. இவ்வாறு மோசடியாக ஒன்றிய அரசு செயல்பட்டிருக்கிறது.

நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் பொருள்களை அரசே கொள்முதல் செய்வது என்பது இல்லை. எனவே இப்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள அற்ப உயர்வையும்கூட நாட்டில் மிகச் சிறிய பகுதியிலேயே விவசாயிகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

மோடி அரசாங்கத்தின் இத்தகு மோசடித்தனமான அற்ப உயர்வைக் கண்டித்து, விவசாயிகள் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.