states

img

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

புதுதில்லி, ஜூலை 19 - “2023-ஆம் ஆண்டிற்கான, இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், வியாழனன்று (ஜூலை 20) துவங்குகிறது. ஆகஸ்ட் 11 வரை 17 அமர்வுகள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொட ரில், மணிப்பூர் இனக் கலவரம், பொது சிவில் சட்டம், ஆளுநர்களின் தலையீடு,  அதானி ஊழல் தொடர்பான ஜேபிசி  விசாரணை, விலைவாசி உயர்வு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு,  பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைத்து நடத்தப்படும் அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட பிரச்சனை களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிட்டுள்ளதால், முந்தைய காலங்களை விட விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக, மணிப்பூர் விவ காரத்தில் பிரதமர் மோடி, இப்போது வாய் திறக்காதது; மணிப்பூருக்குச் செல்லாதது குறித்தும், தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டுவரப் படும் பொது சிவில் சட்டம் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்ப உள்ளன. 

பாஜகவுக்கு எதிராக 26 பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ள பின்ன ணியில், அனைத்துப் பிரச்சனைகளி லும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையாக இணைந்து குரலெழுப்புவார்கள் என்பதால், இந்த கூட்டத் தொடர் ஆளும் பாஜக-வுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது உறுதி.  ஆனால், அவர்களின் கேள்வி களுக்கெல்லாம் பிரதமர் மோடி பதில் சொல்வரா.. அல்லது வழக்கம்போல நாடாளுமன்றத்திற்கே வராமல் இருந்து விடுவாரா? என்பது நாடாளுமன்றம் கூடிய பிறகே தெரியும்.  மோடி அரசைப் பொறுத்தவரை, இந்த கூட்டத்தொடரில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா  2022, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா  2023, உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா 2021, தேவையற்ற சட்டங்களை நீக்க வழிவகுக்கும் ரத்து மற்றும் திருத்த மசோதா 2022, ஜன்  விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா 2022, மத்தியஸ்த மசோதா  2021, அரசியலமைப்பு (பட்டியலிடப் பட்ட பழங்குடியினர்) ஆணை (ஐந்தா வது திருத்தம்) மசோதா 2022, தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023 என 21 புதிய மசோதாக்களையும், 7 பழைய மசோதாக்களையும் தாக்கல் செய்து நிறைவேற்றி விடுவது என்று திட்டமிட்டுள்ளது.  தில்லி அரசின் சேவை அதி காரத்தைப் பறிக்கும் வகையில், பிறப்பிக் கப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மாற்றான நிரந்தர சட்ட மசோதாவை யும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால், இந்த  விவகாரம் தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப் பில்லை என கூறப்படுகிறது.