states

போரிஸ் ஜான்சன் மீது விசாரணை

லண்டன், ஏப்.23- நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொய் சொன்னாரா என்பது பற்றி விசாரிக்கலாம் என்று உறுப்பினர்கள் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்கள். கொரோனா பெருந் தொற்றை எதிர்கொள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கு இருந்த காலத்தில் தனது அலுவலகத்தில் விருந்து வைத்துக் கொண்டாடினார் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக்குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க அனுமதி கோரும் தீர்மானம் பிரிட்டன் நாடாளு மன்றத்தில் கொண்டு வரப் பட்டது. அந்த ஆதரவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலக் கட்டுப்பாடுகளை தானோ அல்லது தனது அலுவலக ஊழியர்களோ மீறவில்லை என்று தொடர்ந்து போரிஸ் ஜான்சன் கூறி வந்தார். ஆனால், கட்டுப்பாடுகளை மீறி விருந்துகள் நடந்தன என்பது தெரிய வந்தது. இதனால் நாடா ளுமன்றத்தின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பொய் கூறிய குற்றத்திற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. நாடாளுமன்றத் தீர்மானம் நிறைவேறியதால் அவர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.