திருமணமான பெண் ஒருவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், அவரது கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பித்தபோது, விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ரேவதி, தான் காண்வரை விட்டு பிரிந்துவிட்டதாகவும், தனது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளதால் கணவரின் கையெழுத்தை கோராமல் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், திருமணமான பெண் ஒருவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தால், அவரது கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருமணமாகிவிட்டால் ஒரு பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவதில்லை; கணவரின் கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்ற பாஸ்போர்ட் அதிகாரியின் போக்கு ஒரு பெண்ணை கணவரின் உடமையாக கருதும் ஆணாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.