states

என்எஸ்இ முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல்

புதுதில்லி, மார்ச்.7- தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ)  முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் பிறப்பித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்த நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ  சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்களன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரக்கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த  மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதி மன்றம், 7 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. என்எஸ்இ நிர்வாக இயக்குநர்-தலை மைச் செயல் அதிகாரியாக கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது. மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. தனியார் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், என்எஸ்இ-யின் கணினி சேமிப்பக (சர்வர்) கட்டமைப்பை பங்குச்  சந்தை தரகர்களுக்கு உதவும் வகையில்,  தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்து சிபிஐ தலைமையகத்தில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார். பின்னர் திங்களன்று பிற்பகலில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.