அம்பத்தூர், ஆக. 25- மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்.பி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி அவதூறாக பாடல் பாடிய நிகழ்ச்சிக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அகரம் மேல் ஏ.ஜி.ரவி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், அதிமுக சார்பில் மதுரையில் அக்கட்சியின் பொன்விழா மாநாடு கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, திமுக இளை ஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் குறித்து கலை நிகழ்ச்சியில் அவதூறாக பாடல் பாடியுள்ளதுடன், அதை அக்கட்சியின் தொலைக்காட்சியில் ஒளி பரப்பியுள்ளனர். இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக உள்ள திமுகவின் முக்கியத் தலைவர்கள் மீது இவ்வாறு அவதூறான அருவருக்கத்தக்க விதமான பாடலை, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய நியூஸ் ஜெ தனியார் தொலைக்காட்சி நிர்வாகிகள் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, சி.வி. ராதாகிருஷ்ணன் மற்றும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்திய எடப்பாடி பழனி சாமி, மாநாடு பொறுப்பாளர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது பொதுவெளியில் பெண் தலைவரை கொச்சைப்படுத்தியதற் காகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற் காவும் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.