சென்னை,அக்.25- பாஜக ஆட்சியில் ஆளுநர்களைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவர்களை துணை வேந்தர்களாக நியமிப்பதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- பாஜகவினர் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், கல்வியைக் காவி மயமாக்குவதில் தீவிரம் காட்டும் முயற்சியின் ஒரு திட்டமாகவே பல்கலைக் கழகத் துணைவேந்தர்களைக் காவி மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் கடந்த 8 ஆண்டுகால ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பல மாநிலங்களில் - குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள்மூலம் அதிவேகமாக, திட்டமிட்டே இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன! உச்சத்தில் கேரளா... தமிழ்நாட்டிலும்கூட கடந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுமைவரை தொடர்ந்து இப்பணி நடந்து வருவது. கேரளாவில் இது உச்சகட்டத்திற்குச் சென்றுள்ளதோடு, ஒரு பெரும் கல்வியாளர்கள் போராட்டமே வெடித்துக் கிளம்பும் நிலையும் உள்ளது. முன்பு தில்லி பல்கலைக் கழகங்களிலும் இதே நிலைதான். இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி குஜராத்திலிருந்து வந்துள்ளது. ‘‘குஜராத் வித்தியா பீடம்” என்பது ஒரு பழம்பெருமை வாய்ந்த அமைப்பு. காந்தியடிகளால் உருவாக்கப்பட்டது. அதில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, பல்கலைக் கழக வேந்தர் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆச்சாரிய தேவ்ரத் என்ற ஆர்எஸ்எஸ்-காரரையே அடுத்த வேந்தராக நியமித்து அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், அதனை அவர் ஏற்கக்கூடாது என்று குஜராத் வித்தியா பீட பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழுவிலுள்ள ஆட்சிமன்றக் குழுவினர் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, தங்கள் பதவிகளை ராஜினாமாவும் செய்துவிட்டனர். ஏற்கெனவே வேந்தராக இருந்த சிலாபட் என்ற அம்மையார்தான் செவ்வாயன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்க வேண்டியவர். (இவர் சுயதொழில் பெண்கள் அமைப்பின் நிறுவனத் தலைவராக இருந்த சமூக சேவகியாவார்). குஜராத் ஆளுநருக்கு இந்த ஆட்சிமன்றக் குழுவினர் ஒரு வேண்டுகோள் கடிதம் எழுயுள்ளனர். அதில், ‘‘காந்தியக் கொள்கை, விழுமியங்கள், நடைமுறைகளில் நம்பிக்கையும், அனுபவமும் உள்ள ஒருவரையே, குஜராத் வித்தியா பீடம் என்ற காந்தியடிகள் ஏற்படுத்திய பல்கலைக் கழகத்திற்கு நியமிப்பதே சரியான பொருத்தமாக இருக்கும்; எனவே, இந்த ஆர்.எஸ்.எஸ்.காரரின் நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம்‘’ என்று எழுதியுள்ளனர். ‘‘இந்த நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்’’ என்று கேட்டுள்ளனர். காந்தியைக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்ற நிறுவனமான ஆர்.எஸ்.எஸ். - இப்போது அவரது கொள்கை - நிறுவனத்தையும் ‘கொன்று’விட இப்படியொரு முயற்சியில் ஈடுபடுவது. அந்தோ விபரீதம்! வேதனை. இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறு வீரமணி தெரிவித்திருக்கிறார்.