சென்னை,செப்.24- தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய கட்டடங்களை சீரமைப்பு செய்து அதன் பழைய தன்மை மாறாமல் புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 17 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.103 கோடியில் சீரமைக்கப்பட உள்ளன. இதற்கான உத்தரவை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் கே.மணிவாசகன் பிறப்பித்துள்ளார். பள்ளிகள், நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் குப்பம் அரண்மனை ரூ.11.54 கோடி செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. கோவையில் ராஜா தெருவில் உள்ள சி.சி.எம்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடம் ரூ.7.60 கோடி செலவில், சிட்கோ நகரில் பல்வேறு கட்டடங்கள் மறு புனரமைக்கப்படுகிறது. சென்னை ராஜாஜி மண்டபம் ரூ.17 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. சென்னை, மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, கோவை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, குமரி, தேனி, திருச்சி ஆகியவற்றில் உள்ள கட்டடங்கள் இதில் அடங்கும். இதுதவிர பி.ஏ.ஓ. கிழக்கு பாரம்பரிய கட்டடம், சேத்துப்பட்டில் உள்ள பழைய வேளாண் துறை ஆவண அலுவலகம் போன்றவையும் மறுசீரமைக்கப்படுகின்றன. தஞ்சாவூரில் உள்ள 3 அரண்மனை கட்டடங்கள் ரூ.9.86 கோடி செலவில் மறு சீரமைக்கப்படுகிறது.