states

இலங்கை தமிழர்களின் திருமணத்தை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 19 - இலங்கைத் தமிழர்களின் திருமணத்தை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 898 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் பதிவுத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களின் திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக அனைத்து சார் பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, விண்ணப்பித்துள்ள 898 இலங்கை தமிழர் தம்பதிகளின் விண்ணப்பங்களை சரிபார்த்து, அவர்களுக்கு முன்னுரிமை அளித்து திருமணங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். மணமக்கள் இரு வேறு மதமாக இருப்பின் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்ய அறிவிப்பு வெளியிட்டு காலம் முடிந்தும் ஆவணங்களை பரிசீலனை செய்து திருமணத்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வகையான திருமணங்களைப் பதிவுசெய்ய சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை 26-ஆம் தேதி செயல்பாட்டில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 76, சேலம் மண்டலத்தில் 128, வேலூர் மண்டலத்தில் 185, திருச்சியில் 79, நெல்லையில் 149, கோவையில் 114, இராமநாதபுரத்தில் 167 என்று நிலுவையில் உள்ள மொத்தம் 898 திருமணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.