சென்னை, ஜூலை 26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் புத னன்று (ஜூலை 26) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, கணவர் வருமானம் ஈட்டி சொத்து சம்பாதிக்கிறார் என்றால், அதற்கு இணையாக வீட்டையும், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கிற பணிகளை மனைவி செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி யது. திருமணத்துக்குப் பின் சேரும் கணவ ரின் சொத்துக்களில் மனைவிக்கு சமபங்கு உண்டு என்றும் குறிப்பிடுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கி யமைக்காக நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு பாராட்டுகிறது. மனைவியின் வீடுசார் வேலை, கணவன் செய்வதை போல எட்டு மணி நேர வேலை அல்ல; மாறாக நாள்முழுவதும் அவர் குடும் பத்திற்காக உழைக்கிறார் என்பதே உண்மை. கணவர் தன் வருமானத்தில் சொத்து சேர்ப்ப தற்கு மனைவியின் உழைப்பும் காரணம்.
தனது கனவுகளை தியாகம் செய்து, வேலைவாய்ப் பையும் நழுவவிட்டு, வாழ்க்கை முழுவதையும் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் மனைவி அர்ப்பணிக்கிறார். பிறகு கணவன் சம்பாதிக்கும் சொத்தில் அவருக்கு பங்கு இல்லை என எப்படி சொல்ல முடியும்? மனைவியின் உழைப்பை மதிப்பற்றதாக எப்படி பார்க்க முடியும் என்பன போன்ற வாதங் களை உயர்நீதிமன்றம் முன்வைத்து குறிப்பிட்ட வழக்கு, மனைவிக்கும் சொத்தில் சமபங்கு இருக்கிறது என்பதை நிறுவுகிறது. கணவர் வருமானம் ஈட்டுவதும், மனைவி குடும்பத்தை பராமரிப்பதும் இரண்டுமே குடும்ப நல னுக்காகத்தான். இதன் மூலம் கிடைக்கும் பய னில் இருவருக்கும் பங்கு உண்டு. எனவே, திருமணத்துக்குப் பின் கணவன் சேர்க்கும் சொத்துக்களில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்பதே உயர்நீதிமன்ற தீர்ப் பின் சாரம். பெண்கள் இயக்கங்கள் நீண்ட காலமாகவே இதனை சட்டமாக்க வேண்டும் என கோரி வந்துள்ளன. தீர்ப்பு என்கிற நிலை யிலேயே நிறுத்தப்பட்டால் அது குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும். தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் அனைவருக்கும் பொருந்தும். தமிழக அரசு, இத்தீர்ப்பின் அடிப்படை யில், திருமணத்திற்கு பின் சேரும் மொத்த சொத்துக்களில் மனைவிக்கு சமபங்கை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.