states

ஜார்க்கண்டில் மதவெறியர்கள் 10 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை!

ராஞ்சி, ஜூலை 6 - ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ எனக் கூறச் சொல்லி முஸ்லிம் வாலிபர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஜார்க்கண்ட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா - கர்ஸ்வான் மாவட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 17 அன்று தப்ரேஸ் அன்சாரி என்ற வாலிபர், மதவெறிக் கும்பலால் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டார். ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ என கூறுமாறு, பல மணிநேரமாக அவரை கட்டி வைத்து அடித்ததில், படுகாயம் அடைந்த தப்ரேஸ் அன்சாரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 5 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.  இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.

அப்போது, மதவெறி காரணமாக தப்ரேஸ் கொல்லப்படவில்லை.  பைக் திருட முயன்றபோதுதான் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று இந்துத்துவா மதவெறியர்கள் கதைகளை பரப்பினர்.  ஆனால், ‘ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான்’ கூறச்சொல்லியே தப்ரேஸ் அன்சாரி தாக்கப்பட்டார் என்பதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியாகி உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.  இந்நிலையில், தப்ரேஸ் அன்சாரி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஜார்க்கண்ட் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமித் ஷேகர் புதனன்று தண்டனை விவரங்களை அறிவித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் ஒருவர் வழக்கு விசாரணையின்போதே இறந்து விட்ட நிலையில், 2 பேரை விடுதலை செய்தும், எஞ்சிய 10 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

;