ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிக்கலானதுதான்!
“நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரம் தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லைக்குள் வராது. இதுதொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுத்தால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை எங்களால் கையாள முடியும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது நிச்சயமாக நிறைய இடையூறுகளை உள்ளடக்கி யதுதான்” என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறி யுள்ளார்.
விமானங்களில் பறந்து இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது!
“இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாகனங்களில் பயணிப்பதில்லை. சாலையில் நடந்து செல்கின்றனர். விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அல்லது வாகனங்களில் செல்வதன் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தியா என்பதை நீங்கள் (பிரதமர் மோடி) புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் சாலைகளில் நடக்க வேண்டும். குஜராத்தில் தேர்தல் இருப்பதால், மகா ராஷ்டிராவில் இருந்து ஏர்பஸ் திட்டம் அங்கு போனது போல் உங்கள் திட்டங்கள் குஜராத்திற்கு செல் கின்றன. பாக்ஸ்கான் திட்டம் கூட குஜராத்திற்கு சென்றுள்ளது. பணத்தைத் தவிர, மாநில இளை ஞர்களின் வேலைகள் மற்றும் எதிர்காலமும் பறிக்கப்படுகிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
2024-க்குப் பிறகு பாஜக-வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது!
“மேற்கு வங்கத்தைப் பிரிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் 2024 நாடா ளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாஜக-வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. கடந்த 2019-ஆம் ஆண்டு நாட்டில் இருந்த அரசியல் சூழல், தற்போது மாறிவிட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாஜக பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது இல்லை. பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. பாஜக பல மாநிலங்களில் ஏற்கனவே இறுதி நிலை யை எட்டிவிட்டது. அதனால்தான் தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை அவதூறாகப் பேசி கைது செய்து வருகிறது” என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
லாலு பிரசாத்திற்கு மகள் ரோஷ்னி சிறுநீரக தானம்?
ராஷ்ட்ரிய ஜனதாதள நிறுவனரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்திற்கு (74) சிறு நீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் லாலு பிரசாத்திற்கு, சிங்கப்பூரில் உள்ள அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா சிறுநீரகத்தைத் தானம் அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
சட்டவிரோத சுரங்க ஒதுக்கீடு வழக்கில், நவம்பர் 3-ஆம் தேதி ராஞ்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனை நிராகரித்த முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “என் மீது குற்றம் இருந்தால், சம்மன் அனுப்புவதை விட்டுவிட்டு கைது செய்யுங்கள்” என சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நவம்பர் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தினமும் 30 நிமிடம் ‘தேசிய நலன்’ சார்ந்த தகவல்கள் ஒளிபரப்பு கட்டாயம்! டி.வி. சேனல்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு
புதுதில்லி, நவ.10- இந்தியாவில் தேசிய நலன் மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்களை தினமும் 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் என தொலைக்காட்சி சேனல்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ‘இந்தியாவில் தொலைக்காட்சி சேனல்களை அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் செய்வதற்கான வழிகாட்டு தல்கள்- 2022’-க்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையிலேயே தொலைக் காட்சி சேனல்கள் தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு தேசிய மற்றும் பொது நலன் சார்ந்த தகவல்கள் ஒளி பரப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, 1. கல்வி மற்றும் எழுத்தறிவு 2. விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு 3. உடல்நலம் மற்றும் குடும்ப நலன் 4. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 5. பெண்கள் நலன் 6. சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன் 7. சுற்றுச் சூழல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு 8. தேசிய ஒருங்கிணைப்பு ஆகிய தலைப்புகளின் கீழ் தினமும் தகவல்கள் ஒளிபரப்ப வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்க சேனல் களுக்கு அவகாசம் வழங்கப்படும் எனவும் இந்த புதிய வழிகாட்டுதல்கள் நவம்பர் 9 முதல் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது என்றும் தகவல் மற்றும் ஒளி பரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டுதலில் சில சேனல்களுக்கு விதிவிலக்கும் அளிக்கப்படுகிறது. அதாவது, விளை யாட்டு சேனல்கள், வனவிலங்கு சேனல்கள் மற்றும் வெளிநாட்டு சேனல்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விளையாட்டு சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நேரங்களில் விலக்கு அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
சென்னை, நவ.10- தமிழகத்தில் ஆறு மாவட்டங்க ளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு எச்சரிக்கை’ (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:- வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வியாழ னன்று (நவ.10) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக நவ.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் அநேக இடங்களில் இடிமின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சா வூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திரு வாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்க ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
போலி இணையதளம்: ரூ.8 லட்சம் சுருட்டிய 3 பேர் கைது
சென்னை, நவ.10- எவ்வளவு விழிப்புடன் இருந்தா லும் ஏமாற்றுபவர்கள் எப்படியாவது ஏமாற்றி விடுகிறார்கள். சென்னையை சேர்ந்தவர் மருத்துவர் தாரா. இவரது மகள் கனடாவில் வசிக்கிறார். அவ ருக்கு தாரா ஒரு கூரியர் பார்சல் அனுப்பி யிருக்கிறார். ஆனால் கூரியர் போய் சேராததால் அந்த நிறுவனத்துக்கு தாராவின் மகள் இலவச அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை. இந்த நிலையில் சற்று நேரத்தில் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது வாட்ஸ்அப்பில் விபரங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அவரும் அதை நம்பி விபரங்களை அனுப்பி உள்ளார். அதை தொடர்ந்து அவரது போனுக்கு சென்ற ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார். அப்படியும் கூரியர் போகவில்லை. ஆனால் தாராவின் மகளின் வங்கி கணக்கிலிருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தை சுருட்டி விட்டனர். இதுபற்றி மருத்துவர் தாரா சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் தெரிவித்துள் ளார். அவரது உத்தரவின் பேரில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.
ஆன்லைன் ரம்மி: அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்கு
சென்னை,நவ.10- ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டுவரப்பட்ட தமி ழக அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசார ணையை நவம்பர் 16 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஆல் இந்தியா கேமிங் ஃபெட ரேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ண மூர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ர வரத்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
மியான்மரிலிருந்து தமிழக இளைஞர்கள் மீட்பு
சென்னை, நவ.10- மியான்மாரில் அச்சுறுத்தி சமூக விரோத செயலில் ஈடுபடுத்தப்பட்ட தமிழக இளைஞர்கள் 8 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மியான்மரிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலமாக புதன் நள்ளிரவில் சென்னைக்கு அழைத்துவரப் பட்டனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அந்த இளைஞர் களை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு வாகனங்கள் மூலமாக அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கெர்சோன் பகுதியில் ரஷ்யா பின்வாங்கியது
கீவ், நவ.10- உக்ரைனின் கெர்சோன் பகுதியில் உள்ள நீபர் ஆற்றின் மேற்குக் கரைப்பகுதியில் இருந்து தனது ராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. மேற்குப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்தார். இத்தகைய முடிவு கடினமானதுதான் என்றும், ஆனால் ரஷ்யப் படைகளின் போர்த் திறனையும், மக்களின் உயிர்களையும் பாதுகாக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டி வந்தது என்று கூறியிருக்கிறார்கள். நீபர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் உக்ரைன் படைகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்கான உத்தியாகவும் இந்தப் பின்வாங்கலை எடுத்திருப்பதாக ரஷ்ய ராணுவம் கூறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தலைவர் செர்ஜி சுரோவிகின், “தற்போதுள்ள சூழலை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, நீபர் ஆற்றின் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவது என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்குப்பகுதியில்தான் கெர்சோன் நகரின் பிரதான பகுதிகள் இருக்கின்றன என்பது உண்மைதான்” என்று குறிப்பிட்டுள்ளார். சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் பேர் மேற்குப் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். உக்ரைன் ராணுவத்தின் தொடர் குண்டுமழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குழந்தைகள் பலியாவது அதிகரிக்கும் என்பதால்தான் இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். மற்ற முனைகளில் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகச் செய்திகள்
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவு தரும் வகையில் சுமார் ஆயிரம் ஏவுகணைகளைத் தரப்போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. தரையில் இருந்து விண்ணை நோக்கிச் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் எதிர்த்தாக்குதல்களுக்குப் பெரும் அளவில் உதவும். இந்த ஏவுகணைகளோடு ஆளில்லா விமானங்களும் வழங்கப்படும். ஏற்கனவே, உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கடும் குளிரினைத் தாங்கக்கூடிய 12 ஆயிரம் ஆடைகளை வழங்கியுள்ளதாகவும் பிரிட்டன் ராணுவத்துறை கூறியுள்ளது.
சவூதி அரேபியாவில் தான் சிக்கிக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த கார்லி மோரிஸ் என்ற அமெரிக்கப் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளுடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக சவூதி அரேபியாவிற்கு வந்த அவர், திரும்பவும் தனது மகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை உருவானது. அவரது முன்னாள் கணவர் எதிர்ப்பு தெரிவித்ததே காரணமாக இருந்தது. இதனால் தான் சவூதி அரேபியாவில் சிக்கித் தவிப்பதாக அந்தப் பெண் பதிவிட்டார். அப்பதிவின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் வாழும் பழங்குடி மக்கள் கடுமையான வறுமையை எதிர்கொள்ளவிருக்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றால், மீண்டும் பழங்குடி மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றனர். நீண்ட காலமாகவே பழங்குடி மற்றும் பழங்குடியல்லாத மக்கள் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான பொருளாதார வேறுபாடு நிலவி வருகிறது. பழங்குடி மக்கள் மத்தியிலான வறுமை 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் குறைந்தாலும், அவர்கள்தான் மேலும் வறுமையின் பிடியில் சிக்கப் போகிறார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.