states

img

கேரளீயம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும்

முதல்வர் பினராயி விஜயன் பேச்சு

திருவனந்தபுரம், நவ. 1- கேரள மாநிலம் உருவான நவம்பர் 1-ஐ ஒருவாரத்திற்கு கொண்டாடும் வகையில் ‘கேரளீயம்’ என்ற நிகழ்ச்சி யை கேரள அரசு வடிவமைத்துள்ளது. இதனை புதனன்று துவக்கி வைத்து முதல்வர் பினராயி விஜயன் உரையாற்றினார். அப்போது,  “கேரள மக்கள் உலகத்தின் முன் தங்களின் சுயமரியாதைக் கொடியை உயர்த்தும் களமாக ‘கேரளீயம்’ மாறும்” என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். உலகத்தின் கவனத்தை கேர ளத்தின் மீது  குவிக்கும் வகையில் ‘கேரளீயம்’  உலகத்தரம் வாய்ந்த பிராண்டாக மாற்றப்படும் என்றும் அவர் பெருமைப்பட குறிப்பிட்டார். இவ்விழாவில் மேலும் அவர் பேசியிருப்பதாவது: “கேரளத்தவர் என்று பெருமைப் படும் அனைவருக்கும் அந்த மகிழ்ச்சி யைப் பகிர்ந்து கொள்ளவும், அதை உலகுக்கு உரக்கச் சொல்லவும் இது ஒரு வாய்ப்பு. உலகம் முழுவதிலும் உள்ள கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் கேரளீயம் தொடரும். திருவனந்தபுரத்தின் அடையாளமாக குறிப்பிடும் வகையில் கேரளீயம் மாறும். கேரளீயத்துக்கு முன்னும் பின்னும் என்ற வகையில் வரலாறு இனி பதிவாகும் வகையில் அது இருக்கும்.

கேரளத்துக்கு ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் உண்டு. நமக்கென்று தனியான சிறப்பு உள்ளது.  துரதிர்ஷ்டவசமாக அது கவனிக்கப் படாமல் போகிறது.  இந்த சிறப்பை தேசத்திற்கும் உலகிற்கும் சரியாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது. அதற்கு மாற்றம் வேண்டும். கேரளத்தவர் என்று பெருமை கொள்ளும் மனம் வேண்டும். நமது தூய்மை முதல் கலைகள் வரை யிலான பெருமைகளை நாம் இளைய  தலைமுறையினரிடம் புகுத்த வேண்டும். யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல கேரள மக்கள். அதுமட்டுமல்ல பல விசயங்களில் முன்னோடிகள் என்ற அந்த சுயமரியாதைக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். உலகின் சில நகரங்கள், சில  கண்காட்சிகள் மற்றும் பல சிறப்பு நிகழ்வுகளாலேயே அறியப்படு கின்றன. எடுத்துக்காட்டாக எடின்பர்க் திருவிழா மற்றும் வெனிஸ் இறுதிப் போட்டி ஆகியவற்றைச் சொல்லலாம். இத்தகைய கண்காட்சிகள், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொடர்புடைய துறைகளில் பெரும் வாய்ப்புகளைத் திறக்கின்றன. இவற்றை நாமும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம். நமக்கென்று சொந்த பாரம்பரியம் உள்ளது. இயற்கை, காலநிலை, உணவு மற்றும் கொண்டாட்டங்களில் அந்த பாரம்பரியம் உள்ளது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் கலாச்சாரம் உள்ளது. சாதகமான வணிக சூழல் இங்குள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் பெரும் வாய்ப்புகளை முன்வைத்து வருகிறோம். எனவே, உலக பாரம்பரியத்தின் சிறிய மாதிரி நம்மிடம் இருக்கிறது என்று கேரளமும் உரத்துக்கூற வேண்டும்.  இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.