states

மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு

சென்னை, மார்ச் 31 சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்  உள்ள மயில் சிலை மாயமானது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்துள்ளதாக  இந்து சமய அறநிலையத்துறை  சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்ற போது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும், அறநிலையத் துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து துறை ரீதியாக நடத்தப்படும் உண்மை கண்டறியும் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது,  சிலை மாயமானது குறித்து விசாரிக்கும் உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையையும் ஆறு வார காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, தமிழக இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில்,  உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு அமைத்து மார்ச் 30ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும், உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க ஆறு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சிலையை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், சிலையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நான்கு மாதங்களில் புதிய சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, மயில் சிலை மாயமானது தொடர்பான  வழக்கின்  புலன் விசாரணையையும், உண்மை கண்டறியும் விசாரணையையும் விரைந்து முடிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்