states

உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு படிப்பை கைவிட்ட 20,000 மாணவர்கள்

சென்னை, ஏப்.12 - ஒன்றிய பாஜக அரசின் பிற்போக்கான நடவடிக்கை யாலும் திணிக்கப்படும் கட்டண உயர்வாலும் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி.,எஸ்டி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் கல்வி கற்பதிலிருந்து இடைநின்றுள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவுகட்டி அனைவரும் கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த 5 ஆண்டுகளில், மத்திய பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் ஓபிசி, எஸ்சி.,எஸ்டி (OBC, SC/ST) மாணவர்கள் சுமார்  20 ஆயிரம் பேர் கல்வியை தொடராமல் இடை நின்றுள்ள  அதிர்ச்சிகரமான செய்தி நாடாளு மன்றத்தில் திருச்சி சிவா எம்.பி., எழுப்பிய கேள்வி யின் மூலம் அம்பலமானது.

ஒன்றிய அரசாங்கம் கல்விக்காக செலவிடும் தொகையில் அதிகமான பங்கினை (10 சதவீதம் வரை)  பெறக்கூடிய ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங் களும், புகழ்பெற்ற மத்திய பல்கலைக் கழகங்களும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாக அணுகக் கூடிய விதத்தில் இல்லை என்பதையே இந்த விபரம் காட்டுகிறது. சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த  சமூகத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து மாணவர்களையும் தேவை உணர்ந்து அரவணைக்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் நமது கல்வி நிறுவனங்கள் அவ்வாறு இல்லை. உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனத்திலேயே இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுவதில்லை என்பதும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வி வளாகங்களில் குறைந்தபட்ச  ஜனநாயகமும் திட்டமிட்டு குலைக்கப்பட்டதுமே இப்பிரச்சனைக்கு ஊற்றுக்கண்ணாகும்.

பாஜக அரசு, கல்வி உதவித் தொகையை வெட்டிச் சுருக்கியுள்ளது. வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் கட்டண உயர்வை புகுத்துகிறது. பிற்போக்கு சிந்தனைகளையும் திணித்து மாணவர்களை வெளியேற்றும் விதத்தில் செயல்படுகிறது. இடை நிற்றல் பிரச்சனை, மாணவர்கள் தற்கொலைக்கு நிகரான அபாயகரமான பிரச்சனை யாகும். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவுகட்டினாலே, அனைவரும் கல்வி கற்பதற்கு சாதகமானச்சூழலை இந்த நிறுவனங்களில் ஏற்படுத்திட முடியும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.