states

அன்று சிறுநீர்; இன்று மலம்!

போபால், ஜூலை 25- போபால் மத்தியப் பிரதேச மாநிலம் சத்திரப்பூர் மாவட்டத்தில் தலித் ஒருவர் மீது மனித மலத்தை பூசிய கொடுமை அரங்கேறியுள்ளது. கட்டிட தொழிலாளியான தஷ்ரத் அஹிர்வார் தனது பணியை முடித்து விட்டு அருகில் இருந்த குழாயில் குளித்து கொண்டிருந்த போது கிரீஸ் உடன் அவரது கை தவறுதலாக ராம்கிரிபால் படேல் என்பவர் மீது பட்டுள்ளது.உடனடியாக ஆத்திரம் கொண்ட அந்த சாதி வெறியன் தலித் தொழிலாளி வைத்திருந்த தண்ணீர் கப்பை பறித்து மனித மலத்தை அள்ளி தலித் தொழிலாளியின் மீது பூசியுள்ளார். ஜூலை 21 அன்று நடந்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர் ஊர் பஞ்சாயத்து கூட்டத்தில் கூற முயன்ற போது ஆதிக்க சாதியினர் மீது குற்றம் சாட்டியதற்காக 600 ரூபாய் அபராதம் விதித்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு ஜூலை 22 அன்று வன்கொடுமை சட்டத்தின் கீழ் ராம்கிரிபால் கைது செய்யப்பட்டுள்ளார்.  பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் சாதி,மத, இன, அடையாளங்கள் மூலம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தீவிரமாக உள்ளது. சில வாரங்களுக்கு முன் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவை சார்ந்த பிரவேஷ் சுக்லா என்ற நபர் பழங்குடி இன சிறுவன் மீது சிறுநீர் கழித்த வீடியோ பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர் ம.பி. முதல்வர் பாதிக்கப்பட்ட நபரின் கால்களை கழுவி நாடகமாடியதும் நினைவுகூரத்தக்கது.