சென்னை, ஜூலை 16- சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடக்கவுள்ளது. 2023 ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆடவர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி நடைபெறவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், ஒடிசாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைக்கு நமது மாநிலத்தில் இருந்து துறை சார்ந்தவர்கள் சென்று பார்த்தோம். அப்போது தான் தமிழகத்தில் இதுபோல ஹாக்கி போட்டிகள் நடத்த வேண்டும் என திட்டமிட்டோம். ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் ஆகஸ்ட் 3 முதல் 12-ஆம் தேதி வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஜப்பான், மலேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா ஆகிய 6 ஆசியா நாடுகள் பங்கேற்கின்றன. செப்டம்பரில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி முன்னோட்டமாக அமையும். 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு போட்டியாகவும் இது கருதப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே முதலமைச்சர் நேரம் இருந்தால், இந்த போட்டிகளை அவரே நேரில் வந்து துவக்கி வைப்பார். இனிதான் இந்த ஹாக்கி தொடருக்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போன்று, இந்த போட்டியையும் தமிழ்நாடு மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி கவனம் செலுத்துவோம்’’ எனக் கூறினார்.