states

பொதுக்கல்வி காக்க களமிறங்கும் அர்ஜெண்டினா மாணவர்கள்

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே. இவர் தீவிர வலதுசாரி. பல்கலைக்கழகங்களுக்கான அரசு செலவினங்கள், 2023 மட்டத்திலேயே நீடிக்கும் எனக் கூறியுள்ளார். பண வீக்கத்தைக் கணக்கில் கொண்டால் இது 80 % குறைவான ஒதுக்கீடு ஆகும். ‘பொது பல்கலைக்கழகங்கள் சோசலிசத்தை உயர்த்திப் பிடிக்கும் மையங்களாக உள்ளன. பொது கல்வி என்பது மாணவர்களின் அறிவாற்றலை அதிகப்படுத்துவதற்கு பதிலாக, மூளைச்சலவை செய்யும் நிலையங்களாக உள்ளன” என்ற விமர்சனத்தை ஜேவியர் மிலே முன் வைத்துள்ளார். இந்நிலையில், ஏப்ரல் 23-இல் பொது பல்கலைக்கழகங்களை பாதுகாப்போம் என கூறி 5 லட்சம் மாணவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அர்ஜெண்டினா பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் தலைவர், பியாரா பெர்னாண்டஸ் பிக்கோலினி , “எங்களது கனவுகளை சிதைக்க விடமாட்டோம்; எங்களது எதிர்காலம் அவர்களுக்கு உரியது அல்ல “எனக் கூறினார் .இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மாணவர் குழுக்களும் , ஆசிரியர் சங்கங்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி கட்சிகளும் ஆதரித்தன. போராட்டத்தில், ‘நாடு விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கம் எதிரொலித்தது. கல்வி என்பது அடிப்படை மனித உரிமை; கல்வி அசமத்துவத்தை குறைக்கிறது என பிக்கோலினி ஆர்ப்பாட்ட முடிவில் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். ஜேவியர் மிலேயின் சிக்கன பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டினால், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. மின்சார சிக்கனம் கடைபிடிக்கப்படுகிறது. லிப்ட்களை குறைந்த அளவே பயன்படுத்துகிறார்கள். அர்ஜெண்டினாவில் பொது பல்கலைக்கழகங்கள் நெருக்கடியில் உள்ளன. 25 லட்சம் மாணவர்களில் ஒருவரான ஸ்டீபன் கூறுவதை கேளுங்கள்:- “இருட்டில் நாங்கள் படிக்கிறோம். பரிசோதனை கூடங்களில் சோதனை பொருட்கள் இல்லை. கல்வி என்பது வணிகம் அல்ல”.  உதவித் தொகைகள், ஸ்காலர்ஷிப்புகள் வெட்டப்படுகின்றன. கல்வியில் முதலீடு செய்ய தவறும் அரசு தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்கிறது என ஆர்ப்பாட்டப் பிரகடனம் கூறுகிறது. அர்ஜெண்டினாவில் கொடூரமான ராணுவ சர்வாதிகார ஆட்சி இருந்தபோது ,30,000 பேர் காவலில் வைக்கப்பட்டனர் அல்லது காணவில்லை. மனித உரிமை அமைப்பின் நிர்வாகி டாட்டி அல்மெய்தா, இந்த 30000 பேருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இவர் போராடும் ஆசிரியர். அவர் கூறுவதை கேளுங்கள்:- “நான் ஒரு தாயாக மட்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை; ஆசிரியராகவும் பங்கேற்கிறேன். பொதுக் கல்வி மூலம் நான் ஆசிரியராகி உள்ளேன். கல்வி என்ற மனித உரிமை காப்போம்”. ஆர்.சிங்காரவேலு