science

img

அறிவியல் கதிர்

♦ கடலில் உரமிடுவது புவி வெப்பத்தை குறைக்குமா? 

கடலில் பைடோபிளாங்டன்(phytoplankton) எனப்படும் நுண் தாவரங்கள் வாழ்கின்றன. இவற்றிற்கு இரும்பு சத்து நிறைந்த நானோ அளவிலான துகள்களை உரமாக அளிப்பதன் மூலம் காற்று மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை கடலுக்குள் சேமிக்கலாம். பசிபிக் வடமேற்கு தேசிய சோதனை சாலையை சேர்ந்த மைக்கேல் ஹோஷெல்லா தலைமையிலான பன்னாட்டு ஆய்வாளர்கள் புவியின் சுற்று சூழலில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடை நீக்குவதற்கு இந்த முறையை முன்வைக்கிறார்கள். இயற்கையில் நிலத்திலிருந்து நதிகள் மற்றும் காற்று மூலம் பிளாங்டன் தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் உரமாக அளிக்கப்படுவதையே இந்த ஆய்வாளர்கள் ஒரு படி முன்னெடுத்துள்ளார்கள். இந்த தாவரங்கள் பெரும் அளவில் கார்பனை உட்கொள்ளும். பின் அவைகள் மடியும்போது கடலுக்கடியில் அதிக ஆழத்திற்கு சென்றுவிடுவதால் கார்பனும் அங்கு சேமிக்கப்படும்.  புவியை குளிர்விக்க உள்ள பல வாய்ப்புகளில் கடலை கார்பன் சேமிப்புக் கிடங்காக பயன்படுத்துவதும் ஒன்றாகும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

♦ சிவப்பு அணுக்கள் மறைந்து பச்சையாகும் தவளைகள் 
கண்ணாடித் தவளை என்றழைக்கப்படும் சிறிய தவளையினம் தூங்கும்போது, 90 சதவீத சிவப்பு இரத்த அணுக்களை இரத்த ஓட்டத்திலிருந்து விலக்கிக் கொண்டு விடுகின்றனவாம். அவை அதனுடைய கல்லீரலினுள்ளே சிறிய பைகளில் குவிக்கப்படுகின்றன. கண்ணாடி போன்ற பரப்பினுள்ளே இவை மறைவாக உள்ளன. இந்த நேரத்தில் அதனுடைய இதயம், வழக்கமான சிவப்பு நிற இரத்தத்திற்குப் பதிலாக நீல நிற திரவத்தை பாய்ச்சுகின்றது.  கண்ணாடித் தவளைகள் உருமறைப்பிற்கு ஒளிரும் தோலைப் பெற்றிருக்கின்றன என்பது ஏற்கனவே அறியப் பட்டதே. ஆனால் தற்காலிகமாக சிவப்பு ரத்த அணுக்களை மறைத்து வைத்துக் கொள்கின்றன என்பது ஒரு புதிய திருப்பம் என்கிறார் டுயூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த படிமுறை வளர்ச்சி உயிரியியலாளரும் இதைக் கண்டு பிடித்ததில் ஒருவருமான கார்லோஸ் தபோடா. இரத்த ஓட்டத்தில் படிவுகள், கட்டிகள் ஆகியவற்றிற்கு ஆளாகும் நமக்கு, மணிக்கணக்கில் எல்லா சிவப்பு அணுக்களையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் தவளைகளுக்கு இரத்த உறைவே ஏற்படுவதில்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.  தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் சிவப்பு அணுக்கள் குவியலிலிருந்து பிரிந்து மீண்டும் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. சிவப்பு அணுக்களை மறைத்து வைப்ப தால் தவளைகளின் ஒளிரும் தன்மை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கிறது. தின்பண்ட அளவே இருக்கும் தவளை களுக்கு பகல் முழுவதும் இலைகளில் மறைந்து இருக்கும்போது இந்த பச்சை நிற ஒளிர்வு முக்கியமானது. உயிருள்ள தவளைகளில் சிவப்பு அணுக்கள் இவ்வாறு செயல்படுவதை காட்டுவதற்கு இந்த ஆய்வாளர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். கண்ணாடி போன்ற மேற்பரப்பில் ஊடுருவி பார்ப்பதற்கு ஒளிநுண்நோக்கி வேலை செய்யாது. தவளைகளை எழுப்பிவிட்டாலோ சிவப்பு அணுக்கள் ஓடிவிடும்.மயக்க மருந்து கொடுத்தா லும் கல்லீரல் வேலை செய்யவில்லை. அதனால் ஒளிஒலி பிம்பம் (photoacoustic imaging)எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.  ஒளியானது வேறுபட்ட மூலகங்களின் மீது மோதும் போது சிறு ஆற்றல் வெளிப்படுகிறது. இந்த தொழில் நுட்பத்தை தவளையின் ஈரலுக்கு ஏற்றாற்போல் மாற்றி அவற்றை தூக்கத்திலிருந்து எழுப்பாமலேயே பயன்படுத்தப் பட்டது. தவளைகள் மட்டுமல்ல பல்வேறு நீர்வாழ் மீன்களும் தங்கள் மேல்பரப்பை கண்ணாடிபோல் கொண்டுள்ளன என்கிறார் அலாஸ்கா மீன் அறிவியல் மையத்தை சேர்ந்த சாரா பிரீட்மன். 

♦      சனிக்கிரகத்தில்    உயிரினங்கள்?

சனிக்கிரகத்தின் பனி படர்ந்த நிலவான என்சிலாடசில் உயிரின் அடிப்படைகூறில் ஒன்றாகிய பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகிய வற்றின் கட்டமைப்புக் கூறான பாஸ் பரஸ் அந்த நிலவின் கடலுக்கடியில் உள்ளது. அது பூமியின் கடலில் உள்ளது போல் ஆயிரம் மடங்கு அதிக அடர்த்தியில் காணப்படுகிறது என் கிறார் விண்வெளி அறிவியலாளர் யசுஹிதோ செகைன். ஏற்கனவே என்சி லாடசில் உயிருக்கு அத்தியாவசிய மான கார்பன், ஹைடிரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் கந்தகம் உள்ளது அறியப்பட்டதே. இப்போது பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உயிரினங்கள் வசிக்கத் தகுதியான கடலை அது கொண்டிருக்கிறது என்று தெரிகிறது என்கிறார் கலிபோர்னியாவிலுள்ள ஜெட் உந்துவிசை சோதனைசாலையை சேர்ந்த மோர்கன் கேபிள்.  ஏற்கனவே 2005ஆம் ஆண்டு நாசாவின் காசினி எனும் விண்கலம் என்சிலாடசி லிருந்து நீராவியும் பனித் துகள்களும் பீறிடுவதை பதிவு செய்திருந்தது. அதன் வேதியியல் தரவுகளை டோக்யோ தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த சேகைன் ஆய்வு செய்தார். அதில் சோடியம் பாஸ்ஃபேட் எனும் கூட்டுப்பொருள் இருப்பது தெரிய வந்தது.  அந்த நிலவின் கடலின் அடியில் கடல் நீரும் அப்பாடைட் (apatite) எனும் தாது உப்பும் வினைபுரிந்து பாஸ்ஃபேட் உருவாகி யிருக்கலாம். அதிக அளவு பாஸ்ஃபேட் இருப்பது சாத்தியமான வேற்று கிரக உயிரினத்திற்கு ஒரு நல்ல சூழலாகும். ஆனால் அங்கு உயிரினம் இருந்தால் இந்த அளவிற்கு பாஸ்பேட் மிஞ்சியிருப்பது எப்படி என்று விளக்கப்பட வேண்டும். ஏனெனில் பூமியில் கிடைக்கும் பாஸ்பேட்டை உயிரினங்கள் உடனுக்குடன் உட்கொண்டுவிடுகின்றன. ஆகவே இரண்டு சாத்தியக்கூறுகள் இருக்கலாம். ஒன்று அங்கு உயிரினங்கள் இல்லை;அல்லது அங்குள்ள உயிரினங்கள் பாஸ்பேட்டை மிக குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்கின்றன.