politics

img

ஏய் `நீ எந்த ஊரு, எந்த சாதி... கிருஷ்ணசாமியின் திமிர் கேள்வி

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ண சாமி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஏய் நீ எந்த ஊரு எந்த சாதி என்று கேள்வியெழுப்பினார். இதற்கு  செய்தியாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டுள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது செய்தியாளர் ஒருவர், `தென்காசி மக்கள் புதிய தமிழகத்தைத்தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ன காரணம்?’ என்று கேட்டார். 
அதற்கு கிருஷ்ணசாமி, `தோல்வியாக நீங்கள் பார்ப்பதை, நான் வெற்றியாகப் பார்க்கிறேன். பிரிந்துகிடந்த சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் பணியை தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் செய்துள்ளேன். இது சமூக மாற்றம். அனைத்து சமுதாய மக்கள் இருக்கும் இடத்தில் எங்களால் வாக்கு கேட்க முடிந்தது என்றால், அது சமூகப் புரட்சிதான். ஜல்லிக்கட்டு தொடங்கி கஜா புயல் வரையிலும் மோடி எதிராக செயல்படுகிறார் என ஒரு மாயைதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம். தமிழக மக்கள் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் உணர்ச்சிக்கு இரையாகியிருக்கிறார்கள்.
மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பிம்பம்தான் தோல்விக்குக் காரணம். மோடி செய்த நல்லதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மோடி அனுமதி கொடுத்தாரே, அதற்கு ஏன் மக்கள் நன்றி செலுத்தவில்லை?” காவிரி பிரச்சனையில் மோடி எல்லாம் செய்து கொடுத்தார் ஆனால் அந்த பெருமையை பிஜேபிக்கு கொடுக்கலையே என்றார். தண்ணீர் குறித்து எழுந்த கேள்விக்கு மழை பெய்தால் தான தண்ணீர் வரும் என்று ஏளனமாக சிரித்தார். 
தொடர்ந்து பாஜக குறித்த ஊடகவியாளர்களின் கேள்வியால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணசாமி தமிழ்நாடு ஊடகங்கள் எதிர்மறையாக கூறி தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்காதீர்கள் என்று உளறினார். ஊடகங்கள் தான் தவறான பிரச்சாரம் செய்கின்றன. தமிழ்நாட்டுக்கு தமிழக ஊடகங்கள் தான் தீங்கு செய்துள்ளன. தமிழ்நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தான் தமிழகத்திற்கு தீங்கு செய்திருக்கிறார்கள் இல்லையென்றால் தமிழக மக்கள் இதுபோன்ற நிலைக்கு போகமாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து, நீட், ஹைட்ரோகார்பன் போன்ற``பா.ஜ.க-வின் திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பிய செய்தியாளரை நோக்கி  , அறிவில்லாம பேசுறீங்க `நீ எந்த ஊரு, எந்த சாதி... உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’ என ஒருமையில் கூறினார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், பலமுறை ஏய் ஏய் என்றார். ஒருகட்டத்தில்`ஏய் உட்காரு..' என்று கூற செய்தியாளர்களுக்கும் கிருஷ்ணசாமி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.  `எந்த சாதி என கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. சாதி என்னனு சொல்லப்பா..’ என்று பேச வாக்குவாதம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.