ஆன்லைனில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருள்களையும், கூகுள் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் பொருள்கள் வாங்குவது அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொருவரும் எந்தெந்தப் பொருள்களை, எந்தெந்த நிறுவனங்களிலிருந்து வாங்குகிறார்கள் என்பதை அவர்களது பர்சேஸ் ஹிஸ்டரியை (purchase history) வைத்து கூகுள் சுலபமாகக் கண்டறிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் `பிரைவேட் வெப் டூல்' (private web tool) மூலம் இந்தத் தகவல்களை அறிய முடியும். மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை வாங்கிய பின்னர், சம்பந்தப்பட்டவர்களின் கூகுள் மெயிலுக்கு வரும் பொருள்களை வாங்கியதற்கான ரசீதுகளும் (purchase receipts) இந்தத் தகவலைக் கண்டறிய உதவுகின்றன.
அதேசமயம் இந்தத் தகவல்களைத் தனிப்பட்ட விளம்பரப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்துவதில்லை என்று மறுத்துள்ள கூகுள், ஜிமெயில் தகவல்கள் மூலம் பெறப்படும் தரவுகளை, விளம்பரத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதாகவும், அதுவும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதலே அதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், ”ஆன்லைன் மூலம் நீங்கள் வாங்க நினைக்கும் பொருள்களை எளிதாகக் கண்டறியத்தான், உங்களது பர்சேஸ்கள், புக்கிங்கள் மற்றும் சந்தாக்களை (subscriptions) கண்காணித்து, உங்களுக்காக உருவாக்கப்பட்ட தனிப்பட்ட இடத்தில் அந்தத் தகவல்களைச் சேமிக்கிறோம். இவற்றை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தத் தகவல்களை அழிக்க முடியும். உங்களிடத்தில் விளம்பரங்களைக் கொண்டு வருவதற்காக உங்களது ஜிமெயில் தகவல்கள் எதையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. இதில், மெயில் மூலம் உங்களுக்கு அனுப்பப்படும் ரசீதுகள் மற்றும் நீங்கள் பர்சேஸ் பக்கத்தில், பொருளை நீங்கள் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவதைக் காட்டும் தகவலும் (confirmations) அடங்கும்” என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், இவ்வாறு நமது ஆன்லைன் பர்சேஸ் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த வெப் டூல் எவ்வளவு காலத்துக்குப் பயன்பாட்டில் இருக்கும் என்பதை கூகுள் தெரிவிக்கவில்லை. இதனிடையே கடந்த 14-ஆம் தேதி முதல் தனது மொபைல் ஆப்பின் முகப்பு பக்கத்தில், விளம்பரங்கள் தெரிவதை கூகுள் அனுமதித்துள்ளது.